உலகக் கோப்பை கிரிக்கெட்டில், வியாழக்கிழமை நாளை இந்திய அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் அரையிறுதிப் போட்டி சவால் காத்திருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுமே முனைப்புடன் உள்ளன. மிகவும் புகழ்பெற்ற பழைமையான சிட்னி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுவதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, நிச்சயம் நாங்கள் வெல்வோம். அதில் என்ன சந்தேகம். அதில் கேள்வியே வேண்டாம். மிகப் பெரிய போட்டிகளை எப்படி ஆடுவது என்பது எங்களுக்குத் தெரியும். அந்தப் போட்டியில், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது. நிச்சயமாக, துவக்க ஆட்டக்காரர்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது என்றார். ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் துவகத்தில் இருந்தே மிகச் சிறந்த ரன்ரேட் வேண்டும் என்று அணி எதிர்பார்க்கிறது. ஷிகர் தவானும், ரோஹித்தும் இணைந்து, அதிரடி காட்டினால் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 5வது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதுவும் இந்தியாவை வென்று, அவர்களின் மிகச் சிறந்த உள்ளூர் போட்டியாளரான நியூசிலாந்தை வெல்லும் முனைப்பில் உள்ளனர். இந்நிலையில், ஆடுகளத்தைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. எந்த விதமான ஆடுகளச் சூழலிலும் நாங்கள் ஆடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார் ரோஹித் சர்மா. இந்தப் போட்டித் தொடரில், இதுவரை நாம் 7 போட்டிகளில் 70 விக்கெட்களை எடுத்துள்ளோம். எப்படி எதிரணியை ஆட்டமிழக்கச் செய்வது என்பது அணிக்குத் தெரியும். எனவே எது தேவை என்பதும் அணிக்கு தெரியும் என்றார் ரோஹித். முன்னதாக, முத்தரப்பு தொடரில், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னருக்கும் ரோஹித்துக்கும் வார்த்தை மோதல் வெடித்தது நினைவிருக்கலாம். அப்போது ஆட்டத்தைத் துவக்கி விளையாடிக் கொண்டிருந்த ரோஹித்திடம் வார்னர் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் வார்த்தை மோதல் வெடித்தது. நடுவர் தீர்த்து வைத்து வார்னருக்கு அபராதம் விதித்தார்.
பெரிய போட்டிகளில் எப்படி விளையாடுவது என்று தெரியும்: ரோஹித் சர்மா
Popular Categories


