பாவம் அந்தப் பெண்… பெண் பாவம்… சும்மா வுடாதுங்க!

Published:

disha-ravi
disha-ravi

என்னதான் இந்தியாவுக்கு எதிராக வேலை செய்தாலும், அந்தப் பெண்ணுக்கு 21 வயது தான் ஆகிறது. இந்த வயதில் என்ன தெரியும் அவளுக்கு? குழந்தையைப் போய் இப்படிக் கொடுமைப்படுத்துவதா?

அவள் என்ன JEE எழுதுகிறேன் பேர்வழி என்று உடலையும் உள்ளத்தையும் வருத்தி 4-5 வருஷங்கள் உழைத்து, IITல் சேர்ந்து உயிரைக் கொடுத்துப் படித்து, பல கீழ் / மத்திய நடுத்தர இந்தியர்களின் பிள்ளைகளைப் போல் அமெரிக்காவில் கூகுள் கம்பெனியில் வேலைக்குப் போனாளா ?

இல்லை, JEE மார்க் குறைந்ததால் அட்லீஸ்ட் BITSAT எழுதி பிலானி, ஹைதராபத் என்று BITSல் சேர்ந்து உயிரைக் கொடுத்துப் படித்தாளா?

அதுதான் இல்லை, துர்காபூர், குவஹாத்தி என்று NITல் சேர்ந்து, ரொட்டி கொடுமைகளை அனுபவித்து, கடின முயற்சியுடன் உழைத்து, படாத பாடு பட்டுப் படித்து ஸன் மைக்ரோ சிஸ்டத்தில் வேலைக்குச் சேர்ந்தாளா?

அதுதான் இல்லை KVPY எழுதி, IISc சேர்ந்து, சோடாபுட்டி கண்ணாடிகளுடன் போட்டி போட்டு, அறிவியல் ஆராய்ச்சி பண்ணினாளா?

ALSO READ:  கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

இல்லை, IISc கிடைக்கவில்லை என்பதால் IISER ல் சேர்ந்து, ஆஸ்டிரோ ஃபிஸிக்ஸ்ல் எம்.எஸ்.சி. வாங்கினாளா? இல்லை, அதைக் கொண்டு இஸ்ரோவில் பணிபுரியும் மற்ற பெண்களைப் போல் வேலைக்குச் சேர்ந்தாளா?

இல்லை, NEET எழுதுகிறேன் என்று பல வருஷங்களைக் காவு கொடுத்து, உயிரைக் கொடுத்துப் படித்து வரும் தையல் தொழிலாளிகளின் மகள்களைப் போல் எம்.பி.பி.எஸ்.ல் சேர்ந்து படித்தாளா?

அல்லது, பி.எச்.டி. போன்ற மாபாதகங்களைப் பண்ணினாளா?

ஒன்றும் வேண்டாம். ஒரு Short Service Commission மூலம் ராணுவத்தில் சேர்ந்து எல்லையில் நின்றாளா என்ன?

கொரோனா காலத்தில் தன் சொந்தக் காசைச் செலவழித்துத் தன் மாணவர்களுக்கு செல்ஃபோன் வாங்கிக் கொடுத்துப் பாடம் நடத்திய தமிழ் நாட்டு ஆசிரியையைப் போல் ஏதாவது அக்கிரமம் செய்தாளா?

மேற்சொன்ன எந்தக் குற்றத்தைச் செய்தாள் அந்தப் பெண்?

என்னதான் செய்தது அந்தக் குழந்தை?

disharavi
disharavi

இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டாள். தேசதுரோகச் செயலுக்கு உதவினாள். இதென்ன குற்றமா? இதே குற்றத்தைத் தொழிலாகவே செய்துவரும் எல்லாரையும் கைது செய்தீர்களா ?

ALSO READ:  ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

ஒரு கட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒப்பந்தம் போடுகிறது. அதை என்ன செய்தீர்கள்? கையெழுத்து போட்டவர்கள் இன்னும் வெளியில் வந்து வெங்காய சாம்பார் செய்கிறார்கள். என்ன செய்தீர்கள்?

முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களின் படத்தைப் போட்டுக் கொடி பிடித்துத் திரியும் கூட்டத்தை என்ன செய்தீர்கள்? கொடி கூட பரவாயில்லை. டைனோசார் கறி சாப்பிட்டேன் என்று கூறுபவர்களை என்ன செய்ய முடிந்தது?

ரோட்டைப் பிளந்து திருட்டு டெலிஃபோன் ஒயர் பதித்து, திருட்டு டி.வி. நடத்தியவர்களை என்ன செய்தீர்கள்? ஒரு கைது உண்டா? ஒரு விசாரணை உண்டா?

வாசன் ஐ கேர் விஷயம் என்னதான் ஆனது? சம்பந்தப்பட்டவர் டென்னிஸ் ஆடுகிறேன் என்று இங்கிலாந்து போக பாஸ்போர்ட் கேட்கிறார்.

2ஜி ஊழல் என்று ஒன்று இருந்ததை இன்று கற்பூரம் அடித்துச் சொன்னாலும் நம்ப முடியாத நிலையில் விசாஆஆஆஆஆஆரஆஆஅணை நடக்கிறது, நடந்தது, நடக்கும். அதில் சம்பந்தப்பட்டவர் காவடி எடுப்பது பற்றி உபன்யாசம் செய்கிறார். அதையும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

ALSO READ:  தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

“ஊருக்கு இளைத்தவள் #toolkit ஆண்டி’ என்று ஏதுமறியாத, மேற்சொன்ன படிப்பு சம்பந்தப்பட்ட எந்தப் பாதகமும் செய்யாத பிஞ்சுக் குழந்தையை, வெறும் 21 வயதே ஆன ஒரு தாய்க்குலத்தை, மாது சிரோமணியை, மகளிர் குல திலகத்தைப் பிடித்து விசாரிக்கிறீர்கள்.

என்னவோ போங்கள். #toolkit பாவம் பொல்லாதது. சொல்லிவிட்டேன்.

  • ஆமருவி தேவநாதன்

Related articles

Recent articles

spot_img