முப்பது ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நம் தமிழகத்தில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திரு. ராஜிவ்காந்தியை வெடிகுண்டு வைத்து படுகொலை செய்தனர் விடுதலை புலிகள் இயக்கத்தினர். அவரோடு 14 தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையிலும், குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு நாட்டின் பிரதமரை கொன்ற குற்றவாளிகளை தியாகிகளாக போற்றும் கொடுஞ்செயல் நம் தமிழகத்தில் மட்டுமே. அதற்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த கோரிக்கையை வைப்பது முழுக்க முழுக்க அரசியலே. ‘தமிழர்கள்’ என்ற உணர்வை தூண்டி விட்டு, அதில் குளிர்காயும் சில அரசியல் கட்சிகளுக்கு துணை போவது காங்கிரஸ் கட்சி தான் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்த விவகாரத்தில், தி மு க கூட்டணியில் இருக்கும் சில அமைப்புகளும், கட்சியினரும் ராஜிவ் காந்தி கொலையை நியாயப்படுத்தி பேசுவதோடு, ராஜிவ் காந்தி அவர்களே குற்றவாளி என்ற ரீதியில் தொடர்ந்து பேசுவதை காங்கிரஸ் கட்சியினர் பொருட்படுத்தாமல், அவர்களோடு அரசியல் அரங்கில் பயணித்ததே இந்த நிலைக்கு காரணம். அரசியல் அதிகாரத்திற்காக தங்கள் தலைவனை கொன்ற கூட்டத்திற்கு சாமரம் வீசும் கும்பலுக்கு துணை போனதை ராஜிவ் காந்தி அவர்களின் ஆன்மா மன்னிக்காது.
பாஜகவை பொறுத்த வரை இந்திரா காந்தி அவர்களின் படுகொலையையும், ராஜிவ் காந்தி படுகொலையையும் வன்மையாக கண்டித்ததோடு, அது பயங்கரவாத செயல் என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறது. நான் பங்கேற்ற பல விவாதங்களில் கூட கடுமையாக கண்டித்து வந்திருக்கிறேன். ஆனால், ஒரு சில காங்கிரஸ் கட்சியினரே ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தொலைக் காட்சிகளில் வலியுறுத்தியும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது இன்று வரை மௌனம் காத்து வருகிறது காங்கிரஸ் கட்சி.
இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியில் நிலவும் ஜனநாயகம் தான் என்று அவர்கள் பதில் கூறுவார்களேயானால், அந்த போலி ஜனநாயகத்தை படுகுழியில் தள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டும்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பின் ஏழு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் குடியரசு தலைவரிடம் வைத்துள்ளார்.
இது காங்கிரஸ் கட்சிக்கு தி மு கவின் வெற்றி பரிசோ?இதை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கண்டனங்களோ, மறுப்போ இல்லாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற அறிக்கை விட்டிருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அவர்கள்.
திரு.அழகிரி அவர்களே, உங்கள் மனசாட்சியை தொட்டு பார்த்து பேசுங்கள். உங்கள் கட்சிக்கும், தேசத்திற்கும் எதிரான செயல் நடக்கும் போது அதை கண்டும் காணாமல் போகலாமா? உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இதற்கு உடன்படுவார்களா?
காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்.
- நாராயணன் திருப்பதி (செய்தித் தொடர்பாளர், பாஜக.,)