
சிறுவன் சுர்ஜித்ஜித்திற்காக அனைவரும் பதறி துடிக்கும் இந்த வேளையில் எங்கள் படத்திற்கான விளம்பரம் வந்ததற்கு வருந்துகிறோம் என்று இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை தனது வீட்டின் தோட்டத்திலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த அந்த குழந்தையை மீட்க கடந்த 62 மணிநேரமாக மீட்பு படையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

தற்போது ஆழ்துளை கிணற்றின் அருகில் சுரங்கம் போல குழி தோண்டப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுர்ஜித்துக்கு நேர்ந்த இந்த அசம்பாவிதத்தால் தீபாவளி பண்டிகையே களையிழந்து காணப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழகமே சுர்ஜித் மீண்டு வர வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்து கிடக்கின்றது.
இந்நிலையில் நடிகர் சசிகுமாரின் கொம்புவச்ச சிங்கம்டா திரைப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக தீபாவளியை முன்னிட்டு விளம்பரப்படுத்தப்பட்டது. சமூகவலைதளங்களில் #PrayForSurjith, #SaveSurjith போன்ற ஹேஷ்டாக்குகள் டிரெண்டாகி வரும் சூழலில் கொம்புவச்ச சிங்கம்டா விளம்பரம் படக்குழுவினருக்கே சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கொம்புவச்ச சிங்கம்டா படத்தின் இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘அன்பு முகநூல் நண்பர்களுக்கு.,கடந்த இரண்டு தினங்களாக எனது “கொம்புவச்சசிங்கம்டா” திரைப்படத்தின் விரைவில் டிரைலர் எனும் paper ad desings செய்தி தாள்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்டிருந்தோம்.,
அதற்கு வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் நன்றிகள் பல., அதே வேளையில் கடந்த இரண்டு தினங்களாக மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுபட்டியில்ஆழ்துளையில் விழுந்துவிட்ட சிறுவன் சுர்ஜித்ஜித்திற்காக அனைவரும் பதறி துடிக்கும் இந்த வேளையில் இந்த AD வேண்டாம் என நாங்கள் முடிவு செய்து அதை STOP செய்ய கூறினோம்.,
ஆனால் எங்களால் முதல் மூன்று நாள் கொடுத்த ADடை STOP செய்ய முடியவில்லை, எனவே இந்த நேரத்தில் எங்களின் விளம்பரம் வந்ததிற்கு வருந்துகிறோம். வரும் செவ்வாய்கிழமை முதல் KVSசின் விளம்பரங்களை நிறுத்திவிட்டோம்.தவறு இருப்பின் மன்னிக்கவும் Savesurjith’ என்று பதிவிட்டுள்ளார்.