சென்னை:
என்னது.. ஹாஜி மஸ்தானா? யாரு அவரு? என்று கேட்கும் விதமாக, ரஜினி பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ரஜினி காந்த் நடிக்கும் படம் ஹாஜி மஸ்தான் கதையல்ல என்று தெளிவாகக் கூறியுள்ளது.
நடிகர் ரஜினி காந்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கும் படம் மும்பை தாதா ஹாஜி மஸ்தான் கதைதான் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக ஒரு பேச்சு உலாவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா, நடிகர் ரஜினிக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அதில், “எனது தந்தையை நிழல் உலக தாதா மற்றும் கடத்தல்காரர் போன்று சித்திரித்துப் படம் எடுக்கக் கூடாது. நீங்கள் அவரை தவறாக சித்திரித்துப் படம் எடுத்தால், தங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.
இந்நிலையில் படத்தைத் தயாரிக்கும் வுண்டர்பார் நிறுவனம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டது.
அதில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் ரஜினி காந்த் நடிக்க ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தைப் பற்றியும் அதன் கதையைப் பற்றியும் பத்திரிகைகளில் பல விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு வந்த செய்திகளில் ஒன்றாக ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றின் பின்னணி கொண்ட கதையாக இப்படம் உருவாகி வருகிறது என்று ஒரு செய்தியும் பத்திரிகைகளில் வெளியானது. நாங்கள் தயாரித்து வரும் இப்படம் மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை மட்டுமே. இப்படத்தின் கதை, யாருடைய வாழ்க்கை வரலாறையோ அல்லது அவர்களுடைய நிஜ சம்பவங்களையோ கொண்டு உருவாக்கப்பட்ட கதை கிடையாது. குறிப்பாக இப்படத்தின் கதை எந்த வகையிலும் ஹாஜி மஸ்தான் மற்றும் அவர்களுடைய குடும்ப பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதையல்ல.
இது தொடர்பாக படத்தின் இயக்குநர் ரஞ்சித், தன்னைத் தொடர்பு கொண்ட பத்திரிகையாளர்களிடம் இது “ஹாஜி மஸ்தானின் கதையல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார்.
இது ‘ஹாஜி மஸ்தானின் கதை’ என்ற செய்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் எங்களின் இந்த விளக்க அறிக்கையை அளிக்கிறோம்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.