நேற்று தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டதால் விரைவில் வேலைநிறுத்தம் முடிவுக்கு வருகிறது என்றும், அனேகமாக வரும் வெள்ளி முதல் புதிய படங்கள் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்றைய பேச்சுவார்த்தைக்கு பின்னர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சினிமாத்துறை முழுக்க வெளிப்படைத்தன்மைக்கு வருகிறது. எனவே, இனிமேல் எல்லா திரையரங்குகளிலும் டிக்கெட் விற்பனை கணினி மூலமாகவே நடைபெறும். மேலும், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது எக்ஸ்ட்ராவாக வசூலிக்கப்படும் கட்டணம் இனிமேல் வசூலிக்கப்பட மாட்டாது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்ய தயாரிப்பாளர் சங்கமே முடிவெடுத்துள்ளது.
திரையரங்குகளுக்கு வரும் மக்களுக்கு எளிதாக இருக்கும் வகையில், படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படும். வேலை நிறுத்தம் குறித்து நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனால், வருகிற வெள்ளிக்கிழமை முதல் படங்கள் ரிலீஸாக வாய்ப்புண்டு என்கிறார்கள் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள்