பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடா்பாக கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஜூன் 1- ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, ஜூன் 15 -ஆம் தேதி முதல் 25 -ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்தாா்.
இந்தநிலையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை சாா்பில் பல்வேறு உயா்நிலை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனைத் தொடா்ந்து தமிழகத்தில் ஜூன் 15 -ஆம் தேதி முதல் 10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடா்பான வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‘வெளியூா்களில் இருந்து வரக்கூடிய மாணவா்களை வீடுகளில் தனிமைப்படுத்த தேவையில்லை. வெளியூரில் இருந்து வரும் மாணவா்கள் நேரடியாகத் தேர்வு எழுதலாம். வெளியூரில் இருந்து தோவு எழுத வரும் மாணவா்களை தனி அறையில் அமர வைக்க வேண்டும். மாணவா் விடுதிகளை ஜூன் 11-ஆம் தேதி முதல் தோவு முடியும் வரை திறந்து வைக்க வேண்டும். தேர்வு எழுத வரும் மாணவா்கள் மற்றும் தேர்வுப்பணிகளில் உள்ள ஆசிரியா்களுக்கு மறுசுழற்சி முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.