
இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வீடியோ கேம்கள், பொம்மைகள் தயாரிக்க மாணவர்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது..
இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:
இந்தியாவில் விளையாட்டு பொம்மை சந்தை 1.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இவை பெரும்பாலும் இறக்குமதி சந்தையின் ஆதிக்கத்திலேயே உள்ளது. இந்த பொம்மைகளில் பெரும்பாலானவை இந்திய பாரம்பரியம், நாகரிகம் மற்றும் கலாசார செழுமியங்களை பிரதிபலிப்பதாக அமைவதில்லை.
எனவே, பொம்மை இறக்குமதியை குறைக்கவும், இந்திய நாட்டின் நாகரிகம், வரலாறு, கலாச்சாரம், புராணங்கள் அடிப்படையிலான பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கவும் ‘ஆத்மநிர்பர்பாரத் அபியான்’ என்ற திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் படி, நமது நாட்டின் கலாச்சாரங்களை கருத்தில் கொண்டு விளையாட்டு பொம்மைகள், வீடியோ கேம்கள், விளையாட்டு கருத்துருக்களை உருவாக்க மத்திய கல்வி அமைச்சகம் ‘டாய் கேத்தான்-2021’ என்ற போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சிறு, குறு தொழில்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்கள் இணைந்து ‘டாய் கேத்தான்’ நிகழ்ச்சியை வரும் பிப். 27-ம் தேதி முதல் நடத்த உள்ளன. இதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், ஸ்டார்ட்-அப்கள், பொம்மை வல்லுநர்கள், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோர் தங்களது புதுமையான பொம்மைகள் மற்றும் விளையாட்டு கருத்துகளை சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில், விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் வல்லுநர்கள் ஜன. 20-ஆம் தேதிக்குள் https://toycathon.mic.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் வெற்றி பெறும் நபர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப் படும். இதைத் தொடர்ந்து, சிறந்த பொம்மைகள் மற்றும் விளையாட்டு கருத்துகள் ‘டாய் கேத்தா’னின் தேசிய பொம்மை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ‘டாய் கேத்தான்’ போட்டி குறித்து தெரியப்படுத்த வேண்டும்.!