பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்லைன் பதிவு வியாழக்கிழமை இன்று தொடங்கியது.
தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியே ஆன்லைன் பதிவு இன்று காலை தொடங்கியது. இது இந்த மாதம் (மே) 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலை., இணையதளம் மூலம் எந்த இடத்தில் இருந்த படியும் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதள வசதியில்லாத மாணவர்களுக்காக சில குறிப்பிட்ட கல்லூரிகளில் பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 100 மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக பொறியியல் கல்வியில் சேர விண்ணப்பிக்க முடியும். மாணவர்கள் தங்களுக்கான பிரத்யேக மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி, 12-ஆம் வகுப்பு தேர்வு அனுமதி சீட்டு, படித்த பள்ளியின் விவரம், சாதிச் சான்றிதழ், ஆதார் எண், பெற்றோரின் ஆண்டு வருமான விவரம், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் இலவச இணையதள மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.
பதிவுக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.500, எஸ்சி., எஸ்.டி., வகுப்பினர் ரூ.250, ஒவ்வொரு சிறப்பு ஒதுக்கீட்டுக்கும் கூடுதலாக ரூ.100 செலுத்த வேண்டும்.
பதிவுக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்த இயலாது. ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும். எனவே, மாணவர்கள் பதிவுக் கட்டணத்தை செலுத்த வசதியாக டெபிட் கார்டு, கிரடிட் கார்டு எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.