சென்னை: கல்விக்கென 24 மணி நேர தனி தொலைக்காட்சியை வரும் 21 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்விக்கென தனி தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்படும் என முன்னர் அறிவித்திருந்தார். அதன்படி வரும் 21 ஆம் தேதி கல்விக்கான தொலைக் காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
இந்த சேனலின் ஸ்டூடியோ கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டடத்தில் 8-வது மாடியில் செயல்படும். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யில் சேனல் 200-வது எண்ணில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு பாடம் தொடர்பான பயிற்சி, போட்டித்தேர்வு, கல்வி உதவித் தொகை தகவல் போன்றவை நிபுணர்கள் மூலம் வழங்கப் படுகிறது. மேலும் பள்ளிக்கல்வி துறை சார்பில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கவும், மாணவர்கள் தங்களது சந்தேகங்களை நேரலை மூலம் நிபுணர்களிடம் கேட்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.
சுமார் 50 ஆசிரியர்கள் கல்வி நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறார்கள். கல்வி தொலைக்காட்சி சேனலில் விளம்பரம் எதுவும் இல்லாமல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும். இதில் 15 விதமான கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் 8 மணி நேரம் ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சிகள் ஒரே நாளில் இரண்டு முறைக்கு மேல் மறு ஒளிபரப்பு செய்யப்படும். இதன் மூலம் நிறைய மாணவர்கள் பள்ளி முடிந்த பிறகு கல்வி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்…. என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.