அயோத்தியில் நடைபெறுகின்ற. பால ராமர் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வுக்கு முன்னதாக நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீரங்கத்துக்கும் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடிக்கும் வந்து வழிபாடுகளை மேற்கொண்டார். இது மிகவும் முக்கியமான மற்றும் நுணுக்கமான அம்சம் பொதிந்தது.
காரணம் ராமபிரான் குலதெய்வமான ரங்கநாதரை தரிசித்து அவரிடம் அனுமதி பெற்று அதன் பிறகு கோயில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வினை மேற்கொள்கிறார் என்பது கவனிக்க வேண்டிய அம்சம். பொதுவாக இது போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு முன்னதாக அணுக்ஞை எனப்படும் அனுமதி பெறுதல் மிகவும் முக்கியமானது. அதில் ராமபிரானின் இக்ஷ்வாகு குலதனம் என்று போற்றப்படக்கூடிய அரங்கநாதரிடம் இந்த நிகழ்வுக்கான அனுக்ஞையை பெற்று சென்று இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
வால்மீகி ராமாயணத்தின் படி அயோத்தி தலத்தின் மகிமையை சொல்லும் போது, அது ஸ்ரீவைகுண்டத்தின் ஒரு பகுதியாக பிரம்மாவினால் பெறப்பட்டு பின்னர் ஸ்வாயம்புவ மனுவால் ராமபிரானின் முன்னோர்களுக்கு அளிக்கப்பட்டது.
ராமர் பட்டாபிஷேகம் நடந்த போது விபீஷணருக்கு பரிசாக தன் குலதெய்வமான ஸ்ரீரங்க விமானத்தை ராமபிரான் அளித்தார். அதை எடுத்துக்கொண்டு இலங்கை நோக்கிச் சென்றபோது காவிரி கொள்ளிடம் இரண்டுக்கும் மத்தியில் ஸ்ரீரங்க விமானத்தை வைத்துவிட்டு விபீஷணர் மாலைக் கடன்களை செய்த போது அந்த விமானம் அப்படியே தரையில் நிலை நின்று விட்டது அவ்வாறே ஸ்ரீரங்கம் திருக்கோயில் அமைந்தது என்பது தல வரலாறு.
அத்தகைய ரங்கநாதரை வழிபட்டு அனுமதி பெற்று அதன் பின்னர் ராமபிரானால் பூஜிக்கப்பட்ட லிங்கம் என்று கொண்டாடப்படும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை வழிபட்டுச் செல்கிறார் பிரதமர் மோடி.
ராமேஸ்வரத்தை தீர்த்த க்ஷேத்திரம் என்பார்கள். எனவே ராமேஸ்வரத்தில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடி அந்த தீர்த்தங்களையும் எடுத்துக் கொண்டு ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வுக்காகச் சென்றிருக்கிறார் பிரதமர்.
ராமேஸ்வரம் தீவில் உள்ள தனுஷ்கோடி, ராமபிரானின் சரிதத்தில் மிக முக்கியமான இடம். இங்கேதான் ராவணனுடன் நிகழ்த்தப்பட வேண்டிய போர் குறித்து ராமன் ஆலோசனை செய்ததாக அகநானூற்று பாடல் குறிப்பும் உண்டு.
இங்குள்ள கோதண்டராமர் கோவில் மிகப் பழமையானதும் ராமபிரானின் பாதச் சுவடுகள் பதிந்ததுமான தலம் என்பதால் இந்த இடங்களுக்கெல்லாம் பிரதமர் வந்து வழிபட்டு சென்றிருப்பது மிகவும் உன்னதமானது. இது அவர் எடுத்துக்கொண்ட செயலை முழுமையாகவும் நேர்த்தியாகவும் செய்ய வேண்டும் என்கின்ற மன உறுதியை வெளிப்படுத்துகிறது.
இன்னும் சொல்லப்போனால் தமிழகம் இதுவரை இப்படிப்பட்ட பிரதமர் எவரும் வந்து தங்கள் பகுதியைக் கொண்டாடியதை, வழிபட்டதை, தங்களுடன் ஒன்றாகக் கலந்து நின்றதைப் பார்த்ததில்லை. அந்த வகையில் பிரதமரின் இந்த நடவடிக்கை, பிற்காலத்திலும் கூட பெருமளவில் நினைவுக்கூரப்படும் ஒரு சரித்திரப் பதிவாகவே அமைந்திருக்கும்!