வினாயக் தாமோதர் சாவர்க்கர் 1883 ஆம் வருடம் மே மாதம் 28ஆம் தேதி, மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் அருகே அமைந்துள்ள பாகூர் எனும் இடத்தில் பிறந்தவர். 1910 ஆம் வருடம் அந்தமான் சிறையிலே,50 வருட சிறைத் தண்டனையை அனுபவிக்க அடைக்கப்பட்டார்.
தன்னுடைய 27 வயதிற்குள்ளாக , அதாவது தான் சுதந்திர மனிதராக இருந்த அந்தக் குறுகியக் காலத்திற்குள், அவர் செய்த சாகசங்கள் தான் எத்தனை எத்தனை..!!
அந்த சிறிதுக் காலத்திற்குள் வாழ்க்கையை அபாய கரமாக வாழ்ந்தார். அவருக்கு 12 வயது இருக்கும் போது, கிராமத்திலே மக்களை மிரட்டிக் கொண்டு திரிந்து கொண்டிருந்த ரவுடிகளை, சிறுவர்கள் படையைத் திரட்டிக் கொண்டு அடித்து விரட்டினார்.
16 வயது இருக்கும் போது, உயர்நிலைப் படிப்பிற்காக நாஸிக்கில் இருந்த போது, ஆங்கில அரசை தூக்கி எறிய ஒரு புரட்சிகர அமைப்பை துவங்கினார். பள்ளியில் பாடங்களில் என்னவோ குறைந்த மதிப்பெண்கள்தான், ஆனால் தன்னுடைய ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தும் அளவிற்கு பாரத சரித்திரமும், சமஸ்கிருத காவியங்களும் அவருக்கு அத்துபடி!
உள்ளூர் நிகழ்ச்சிகளின் போது பாரத சரித்திரம் மற்றும் சம்ஸ்கிருத காவியங்கள் குறித்து மக்களை ஈர்க்கும் வண்ணம் பேசுவார். 1903 ஆம் ஆண்டு மெட்ரிக் பரிட்சையில் தேர்வடைந்த பிறகு கல்லூரிப் படிப்பிற்காக நாஸிக்கை விட்டு பூனா சென்றார்.
அப்போது ஊரின் பெரிய மனிதர்கள் பலரும் திரண்டு அவருக்கு பிரியாவிடை அளித்தனர். பூனாவில் கல்லூரி மாணவராக இருந்த போது, ‘ அரசியல் தொடர்பான கூடுதல்கள்‘ நடைபெற்ற போது,அதில் நடுநாயகமாக விளங்கினார்.
அதன் காரணமாக, அவர் மீது போலீஸின் கண்காணிப்பும் துவங்கியது. அவர் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது, சுதேசி இயக்கத்தில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றார். சுதேசி இயக்கத்தின் முக்கிய நிகழ்வு, அன்னிய துணிகள் பகிஷ்கரிப்பு.
அன்னிய துணிகள் பகிஷ்கரிப்பின் ஒரு பகுதி அன்னிய, பிடிட்டிஷ் துணிகளை பொது இடங்களில் வைத்து எரிப்பது. இந்த அவரின் செயல்பாடுகள் காரணமாக கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அரசியல் காரணங்களுக்காக,ஆங்கிலேய அரசால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப் பட்ட முதல் மாணவர் ஆனார்.
ஆனாலும்,B.A. பரிட்சைகள் துவங்கியப் போது,பரிட்சை எழுத அனுமதிக்கப்பட்டார். பரிட்சையில் தேர்வும் பெற்றார். அதன் பின் அவர் செய்த முதல் காரியம்…
இளைஞர்கள் பலரை ஒன்று திரட்டி ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஆயுதப் புரட்சியில் இறங்கியது
( தொடரும்)
– எழுத்து: யா.சு.கண்ணன்




