கடந்த ஜூலை 2017ல் கேரள சர்ச்சுகள் சில, யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று இரு பிரிவினருக்கிடையே பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருந்த வழக்கில் தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம். ‘ஜாக்கோபைட்’ என்ற பிரிவினருக்கு எதிராக அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பையடுத்து, தீர்ப்பை ஏற்க மறுத்த அந்த பிரிவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடு பட்டனர்.
லட்சக்கணக்கான மக்களை திரட்டி, தீர்ப்பை ஏற்க முடியாது என்றும், தங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் போராடினார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வேண்டிய கேரள கம்யூனிஸ்ட் அரசு அமைதி காத்தது.
ஒரு வருடம் கழித்து ஜூலை 2018ல் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசின் சார்பாக அதன் மூத்த வழக்கறிஞர் தாஜூதீன் அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “இந்த தீர்ப்பு பல லட்சக்கணக்கான மக்களுக்கு உணர்ச்சிகரமான விவகாரமாக உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு இருபிரிவினரிடையே மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதால், சட்ட ஒழுங்கு சீர்கேடும் நிலையை எட்டியுள்ளது.
ஆகையால் இருபிரிவினரிடையே பேச்சு வார்த்தை நடத்தி, அதன் பிறகே நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த முடியும். ‘ஜாக்கோ பைட்’ பிரிவினர், எதிர்தரப்பினர் தங்களின் ஆலயத்திற்குள் (சர்ச்சுக்குள்) நுழைந்தால் தற்கொலை செய்து கொள்வோம் என்று எச்சரிக்கின்றனர். அதுபோன்று நடந்தால் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் பரவும். சட்ட ஒழுங்கு சீர்கேடும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய அதே வேளையில், அமைதியான தீர்வையும் ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது. மதம் தொடர்பான, உணர்ச்சிபூர்வமான இந்த விவகாரத்தில் இந்த தீர்ப்பை அமுல்படுத்த குறிப்பிட்ட கால அவகாசத்தை நீதிமன்றம் விதிக்கக்கூடாது” என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில், பெரும்பான்மையான பெண்கள் உட்பட பல கோடி பக்தர்கள், 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்கு செல்வதை ஏற்க மறுக்கும் நிலையில், தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தே பல்வேறு போராட்டங்களை முன்வைத்தனர்.
ஆனால், செவிமடுக்காத கேரள அரசு தன் ஆதிக்கத்தினை செலுத்தி தேவசம் போர்டையும் அனுமதிக்காத நிலையில் தெருவில் இறங்கி போராட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகினர். குழந்தைகள், பெண்கள், முதியோர் என்று லட்சக்கணக்கானோரின் உணர்வுகளை, உணர்ச்சிகளை மதிக்காமல், வன்முறையில் இறங்கியது கம்யூனிஸ்ட் அரசு.
உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யமுடியாது என்று பிடிவாதம் பிடித்தது. 50-க்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுக்களை ஜனவரி மாதம் 22-ந்தேதி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை கடந்த 19ம் தேதி தாக்கல் செய்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்தால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை. அந்த வசதிகளை சபரிமலையில் ஏற்படுத்தும் வரை பெண்களை அனுமதிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்றே அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி 22 ம் தேதி சீராய்வு மனுவை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், மக்களின் உணர்வுகளை மதித்து, அதில் வரும் தீர்ப்பு வரை மூல வழக்கின் தீர்ப்பை அமல்படுத்தாது இருப்பதே மக்கள் உணர்வுகளை மதிக்க கூடிய ஜனநாயக அரசின் கடமை.
ஆனால், கேரள கம்யூனிஸ்ட் அரசு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் தொடர்ந்து அறவழியில் போராடும் பக்தர்களை துன்புறுத்தி, காவல்துறையின் உதவியோடு வன்முறையில் ஈடுபடுவது வன்மையாக , கண்டிக்கத்தக்கது.
கிறிஸ்துவர்களின் மனம் புண்பட்டுவிடும், பிரச்சினைகள் வெடிக்கும், சட்ட ஒழுங்கு சீர்கேடும், அமைதியாக விவகாரத்தை தீர்க்க வேண்டும் என்றெல்லாம் சர்ச்சுகள் விவகாரத்தில் முடிவெடுத்து நேரம் கேட்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசு, சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை உடனே அமல்படுத்த துடிப்பது ஹிந்துக்களை பிரித்தாள வேண்டும், பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற ஹிந்து மத எதிர்ப்பு வெறியால்தான் என்பது கண்கூடு.
சிறுபான்மை சமுதாயத்தை தாஜா செய்து அவர்களின் வாக்கு வங்கியை முழுமையாக பெற வேண்டுமென்ற வேட்கை, ஹிந்து பெரும்பான்மை சமுதாயத்தை பிளவுபடுத்தி அவர்களின் வாக்குகளை பிரித்தாளவேண்டும் என்ற சூழ்ச்சியே சபரிமலையில் நடைபெறும் அராஜகத்திற்கு காரணம்.
‘மதவாதிகள்’ என்று பாஜகவை சாடிய மதவாத, வாக்கு வெறிபிடித்த கம்யூனிஸ்ட் கட்சியின் முகத்திரை கிழிந்தது. ஓட்டுக்காக நாட்டை போர்க்களமாக முயற்சிக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சியை மக்கள் ஒன்று திரண்டு கடுமையாக எதிர்க்கின்றனர்.
கம்யூனிஸ்ட் இயக்கமானது கேரளாவில் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை.
- நாராயணன் திருப்பதி,செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.