ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு: உச்ச நீதிமன்றம்

Published:

புது தில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆச்சாரியா எழுதிய புத்தகம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த தகவலை இன்று தெரிவித்தனர்.
தமிழகத்தில் 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை முதல்வராக ஜெயலலிதா இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை விதித்து பெங்களூரு விசாரணை நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது.
பின்னர், மேல்முறையீட்டு வழக்கில் நால்வரையும் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. அதன் தீர்ப்பை எதிர்த்து வழக்கு நடைபெற்ற மாநிலம் என்ற முறையில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

இந்நிலையில், கர்நாடக அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா எழுதியுள்ள தனது சுயசரிதையில், “சொத்துக் குவிப்பு வழக்கில் எனக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை மேற்கோள்காட்டி, தமிழகத்தைச் சேர்ந்த பி. ரத்னம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் “சொத்துக் குவிப்பு வழக்கில் ஆச்சார்யா ஆஜரான போது அவருக்கு அழுத்தங்கள் இருந்ததாகக் கூறியுள்ளார். எனவே, அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் ஆச்சார்யா நேர்மையான முறையில் ஆஜராகி செயல்பட்டாரா என்பதையும் விசாரிக்க வேண்டும்”எனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

மேலும், அவர் தனது புத்தகத்தில் கூறியுள்ள புகார்கள், குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

ரத்னம் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தனது வாதத்தை முன் வைக்க வந்தார். ஆனால், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

இத்தனை நாட்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் காரணம் என்ன என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த 4 வாரத்தில் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

Related articles

Recent articles

spot_img