ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
காஷ்மீரின் நவ்காம் செக்டார் வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற மூன்று பயங்கரவாதிகளையும் எல்லைப் பாதுகாப்பு படை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
“நவ்காம் செக்டாரில் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள், சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாட்டம் இருப்பதைக் கண்டனர். இதை அடுத்து, பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிக்கு சவாலை ஏற்படுத்தினர். பயங்கரவாதிகள் உடனடியாக பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்திய நிலைகளை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இச்சண்டையில் பயங்கரவாதிகள் மூவர் கொல்லப்பட்டனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கி, வெடிப்பொருட்கள் என பெருமளவு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது