ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் கோலோச்சிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தன்னை அமலாக்க இயக்குநரகத்தில் சரணடைய அனுமதிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இன்று தள்ளுபடி செய்தது.
திஹார் சிறையில் அடைக்கப் பட்டுள்ள ப.சிதம்பரம், நீதித்துறை காவலில் இருந்து விடுவித்து, அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் விசாரணைக் காவலில் வைக்கக் கோரி நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை வைத்தார்.
ஆனால், சிதம்பரத்தின் சரணடைதல் மனுவை சிறப்பு சிபிஐ நீதிபதி அஜய் குமார் குஹார் தள்ளுபடி செய்தார்.
பி. சிதம்பரத்தின் காவலை இப்போது விரும்பவில்லை என்று நேற்று சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியது. முன்னாள் நிதியமைச்சரின் காவலைப் பெற வேண்டிய தேவை ஏற்படும் போது அந்த அமைப்பு நீதிமன்றத்தை அணுகும் என்று தெரிவித்தது. எனவே, ப. சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு அமலாக்கத்துறை கோரியது.
குற்றம் சாட்டப்பட்டவர், எப்போது கைது செய்யப்படலாம் என்று விசாரணை செய்யவோ அல்லது ஆணையிடவோ முடியாது என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கூறியதாக கூறப்படுகிறது.
சிதம்பரம் காவலில் இருப்பதால், அவர் சாட்சியங்களை சேதப்படுத்தவோ அல்லது சாட்சிகள் மீது தாம் செல்வாக்கு செலுத்தவோ முடியாது என்றும் அது கூறியது.
ஐ.மு.கூ., அரசில், நிதி அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு நிதி அனுமதிகளை முறைகேடாக வழங்குவதற்காக தனது அமைச்சரவை பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிதம்பரம் தற்போது திகார் சிறையில் சிபிஐ., நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் முன்னதாக சிபிஐ கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டார்!