கேரளத்தின் மதுவிலக்குக் கொள்கை சரியானதே: உயர் நீதிமன்றம்

Published:

kerala-high-court திருவனந்தபுரம்: கேரள அரசு கொண்டு வந்துள்ள மதுவிலக்குக் கொள்கை சரியானதுதான் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. கேரளாவில் உள்ள 780 மதுபானக் கூடங்களில் 418 பார்கள் கடந்த ஆண்டு மூடப்பட்டன. மீதமுள்ளவற்றில் பெரும்பாலானவையும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே மது பான பார்கள் செயல்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மதுபான பார்களும் மூடப்பட வேண்டும் என்றும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி அளித்த வாக்குறுதியில், அடுத்த 10 ஆண்டுகளில் கேரளாவில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார். அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மதுபான பார் உரிமையாளர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் கே.டி. சங்கரன், பாபு மேத்யூ பி. தாமஸ் ஆகியோர் விசாரித்து தீர்ப்ப்பளித்தனர். அதில்… அரசின் நிதிநிலை மோசமாகி வருவதாக மதுபான பார் உரிமையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். உண்மையில் அவர்களுக்கு அரசின் நிதிநிலையில் அக்கறையில்லை. மக்களின் நலன் கருதியே அரசு மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. அரசின் முடிவில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. நான்கு நட்சத்திர ஓட்டல்களில் மதுபான பார்களை நடத்த தனி நீதிபதி அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்கிறோம். என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த மதுபான பார் உரிமையாளர்கள் இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர். கேரள உயர் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பின் படி, இனி ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே மதுபான பார்கள் செயல்படும். அவ்வகையில் 24 பார்கள் மட்டுமே செயல்படும். இருப்பினும், பீர், ஒயின் வகை பார்களுக்கு தடையில்லை என்பதால் அவை செயல்படும்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Related articles

Recent articles

spot_img