வரும் பிப்.8ஆம் தேதி தில்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுனில் அரோரா, தில்லி சட்டசபைக்கான தேர்தல் தேதியை இன்று மாலை அறிவித்தார்.
தில்லியில் தேர்தல் நடத்துவது தொடர்பாக போலீஸ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினோம். சட்டசபை தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். மூத்த குடிமக்களுக்கு வாகன வசதி செய்து கொடுக்கப்படும்… என்றார் அவர்.
ஜனவரி 1 ஆம் தேதி கணக்கின்படி தில்லியில் 1 கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136 வாக்காளர்கள் உள்ளனர். சட்டசபையில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும்.
வரும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. 13,750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். 90 ஆயிரம் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
தேர்தல் அட்டவணை விவரம் :
வேட்பு மனு தாக்கல் – ஜன.14
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் – ஜன.21
வேட்பு மனு பரிசீலனை – ஜன.22
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் – ஜன.24
வாக்குப்பதிவு – பிப்.8 (சனிக்கிழமை)
வாக்கு எண்ணிக்கை; பிப்-11 (செவ்வாய்க்கிழமை)