பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் 5வது இடத்தில் இந்தியா உள்ளது என்று கூறினார் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்ற மக்களவையில் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசி வருகிறார்.
நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளன என்று கூறிய அவர், பணவீக்க விகிதம் கட்டுக்குள் வைக்கப் பட்டுள்ளது என்றார்.
பட்ஜெட் அறிக்கையில் முன்னாள் நிதி அமைச்சர் அருண்ஜேட்லிக்கு புகழாரம் சூட்டிய நிர்மலா சீதாராமன், வரி கணக்கு தாக்கலுக்கு மிகவும் எளிமையான முறை வரும் ஏப்ரல் முதல் அமல் படுத்தப் படும் என்று கூறினார்.
இந்தியாவின் பொருளாதாரத்தின் மீது அதீத நம்பிக்கை ஏற்படும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் பலன்பெறும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், கடந்த 6 ஆண்டு கால மோடி அரசில் நாடு முழுவதும் நிர்வாக சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
நிர்வாக சீர்திருத்தங்கள் மூலமாக நாட்டின் பொருளாதார கட்டமைப்பு வலுப்பெற்றுள்ளது ஜிஎஸ்டி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது மோடி அரசின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை என்று குறிப்பிட்ட அவர், மக்களின் செலவிடும் சக்தியை அதிகரிக்கும் நோக்குடன் பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளது என்றார்.
ஜிஎஸ்டி இந்தியாவின் வரி முறையை நாடு முழுவதும் ஒருங்கிணைத்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.ஜிஎஸ்டி அமலான பிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 4 சதவீதம் அளவிற்கு அன்றாட செலவு குறைந்துள்ளது ஜிஎஸ்டி மூலமாக சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மக்களுக்கு பணப்பலன் கிடைத்துள்ளது என்று கூறினார்.
சுமார் 16 லட்சம் புதிய வரி செலுத்துபவர்கள் தற்போது உருவாகியுள்ளனர். 40 கோடி வருமான வரிக் கணக்கு நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்க பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்று கூறினார் நிர்மலா சீதாராமன்.