என் கண்ணையே ஒப்படைக்கிறேன் கதையாக தனது டிவிட்டர் கணக்கை பெண்ணிடம் ஒப்படைக்கப் போறாராம் பிரதமர் மோடி… அதுவும் மார்ச் 8ஆம் தேதி! உலகம் முழுக்க மகளிர் தினம் என்று கொண்டாடுகிற நாளில்!
கடந்த ஞாயிறு அன்று டிவிட்டர், பேஸ்புக், யுடியூப், இன்ஸ்டா என சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிவிடலாமா என்று ஒரு கணம் யோசித்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி. இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தை பெண் ஒருவர் நிர்வகிக்க வாய்ப்பு வழங்கப் போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சர்வதேச மகளிர் தினம், வரும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப் படவுள்ளது. இந்நாளில் பெண்களை கௌரவிக்கும் விதமாக எனது டுவிட்டர் கணக்கை பெண்ணிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன். வாழ்க்கையில் தனது சேவையால் முன்மாதிரியாக திகழும் பெண்ணிடம் ஒப்படைக்கிறேன். இது லட்சக்கணக்கான மக்களின் எண்ணத்தையும், கருத்தையும் வெளிப்படுத்த பெரும் உதவியாக அமையும். உங்களின் கருத்துகளை #SheInspiresUs என்ற ஹேஷ்டாக்கில் பதிவிடுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இது போன்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தை பெண்களுக்காகக் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். முன்னர், மகள்களுடன் நான் என்று ஒரு பிரசாரம் செய்தார். அதில், ஒவ்வொருவரும் தங்கள் மகள்களுடன் செல்ஃபி எடுத்து அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பலத்த வரவேற்பு இருந்தது.