
குஜராத் மாநிலத்தின் சிறந்த சுற்றுலா அடையாளம் ஆகியுள்ள நர்மதா நதியின் நடுவில் அமைக்கப் பட்டுள்ள சர்தார் வல்லப பாய் படேலின் ஒற்றுமை சிலை ஓஎல்எக்ஸ்., இணையதளம் மூலம் ரூ. 30 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப் போவதாக விளம்பரம் செய்யப் பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தி ஒன்று நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஒற்றுமை சிலை தலைமை நிர்வாகி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் இந்தியாவில் பரவியுள்ள கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவமனை கட்டவும், மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் மருத்துவ உள்கட்டமைப்புக்கு அரசுக்கு பணம் தேவைப்படுவதால் சிலையை ரூ. 30 ஆயிரம் கோடிக்கு விற்கப்பட உள்ளதாக ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் அந்த நபர் குறிப்பிட்டிருந்ததாக அந்த நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இதை அடுத்து, அடையாளம் தெரியாத ‘மர்ம’ நபர் மீது எப்ஐஆர்., பதிவு செய்யப் பட்டுள்ளது என்றும், மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


