இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,265-ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 23-ம் தேதியே முதல்கட்டமாக 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், வைரஸின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வந்ததால் இரண்டாம் கட்டமாக வரும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட ஊரடங்கில் இன்று முதல் சில நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,116-லிருந்து 17,265-ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேமசயம் பலியானோரின் எண்ணிக்கை 519-லிருந்து 543-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,302-லிருந்து 2,547-ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக, மகாராஷ்டிரம் – 4203, தில்லி – 2003, குஜராத் – 1743 ,ராஜஸ்தான்-1478, தமிழகம் – 1477, ம.பி.,-1407, உ.பி., – 1084, தெலங்கானா-844, ஆந்திரம் – 646, கேரளம்-402, கர்நாடகம்- 390, புதுச்சேரி – 07 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.