இந்தியாவில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் 80% பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது.
இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கை: காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் இந்தியாவில் 80% பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 80% பேருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 543ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,553 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இன்னும் கண்டறியப்படாத பல அறிகுறியற்ற நபர்கள் இருக்கலாம் என்ற கவலை எழுந்துள்ளது.