
சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியின் தலைவருமான அஜித் ஜோகி மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் ராய்ப்பூரில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்து கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்
74 வயதாகும் அஜித் ஜோகிக்கு நேற்று பிற்பகலில் அவரின் வீட்டில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை ராய்ப்பூரில் உள்ள ஸ்ரீ நாராயணா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர். அவருக்கு தீவிரமான சிசிச்சையளிக்கப்பட்ட நிலையில் அவரின் நரம்பியல் மண்டலத்தின் செயல்பாடு முற்றிலும் நின்றுவிட்டது என்றும், வெண்டிலேட்டர் மூலம் சுவாசிக்கிறார், கோமா நிலைக்குச் சென்றுவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஸ்ரீநாராயணா மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் சுனில் கெம்கா நிருபர்களிடம் கூறுகையில் ‘ அஜித் ஜோகியின் இதயம் இயல்பாகத்தான் இயங்குகிறது. ரத்த அழுத்தத்தை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தி வருகிறோம், நேற்று மாரடைப்பு ஏற்பட்டபின் மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வதில் சிலசிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
அனேகமாக மூளையில் சேதமோ அல்லது செயலிழந்திருக்கலாம். இது மருத்துவத்தில் ஹைபோக்ஸியா எனச் சொல்வார்கள். திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் செல்லாமல் இருப்பதைத்தான் குறிக்கும்
அதுமட்டுமல்லாமல் ஜோகியின் நரம்புமண்டலம் முற்றிலும் செயலிழந்துவிட்டது. சுருக்கமாக சொன்னால் கோமாவுக்கு சென்றுவிட்டார். வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்படுகிறது. இவரை இயல்பு நிலைக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன
ஆனால், உடல்நிலைமோசமாக இருக்கிறது. அடுத்த 48 மணிநேரத்தில் அஜித் ஜோகியின் உடல் மருந்துகளுக்கு எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதைப் பொறுத்தே எதையும் கணிக்க முடியும்’ எனத் தெரிவித்தனர்