சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில், மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 369 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள தனிமை படுத்தப்பட்ட முகாம்களில், நோய்தொற்று பாதித்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெந்திராவிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் மே 27ம் தேதி ஒன்றரை வயது பெண்குழந்தையும், கபிர்தாமிலுள்ள முகாமில் 3 மாத குழந்தையும் உயிரிழந்துள்ளது.
இதேபோன்று பலோட் பகுதியிலுள்ள முகாமிலும் 4 மாத குழந்தை நேற்று (28-05-2020) உயிரிழந்துள்ளது. கடந்த இருதினங்களில், மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.