பேரிடர், ஆபத்து, கொள்ளை நோய் போன்ற காலங்களில் நம்ம ஊரில் கோயில்கள் தோன்றுவது வழக்கமான ஒன்றுதான்.
இதேபோல் கேரளாவில் கொரோனாவுக்கு கோயில் ஒன்றை எழுப்பி கோரோனா அம்மனை எழுந்தருளச் செய்து பூஜைகள் நடத்தி வருகிறார் பூஜாரி ஒருவர்.
தெர்மாகோல் மூலம் தற்காலிக கோயிலை எழுப்பிய பூஜாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கேரளாவில் கொல்லம் நகரில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள கடக்கல் என்ற இடத்தில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது.
இந்த ஆலயத்தை அனிலன் என்பவர் கட்டி உள்ளார். கொரோனா வைரஸ் உருவத்தை சிலையாக நிறுவி அதற்கு பூஜைகள் செய்து வருகிறார்.
இது குறித்து அனிலன் கூறியதாவது: 33 கோடி இந்து கடவுள்களில் மேலும் ஒரு அவதாரம்தான் இந்த கொரோனா அம்மன். தொற்றுநோய்க்கு எதிரான போரில் ஈடுபடும் அனைவரது பாதுகாப்புக்காக நான் இந்த தெய்வத்தின் முன் பூஜைகளை நடத்தி வருகிறேன்.
கோயில்கள் மீண்டும் திறக்கப்படுவதன் பின்னணியில் உள்ள அரசியல் பிரசாரத்திற்கு எதிரான போராட்டம் நடப்பதால் தரிசனம் இருக்காது என்பது தெரியும். ஆனாலும் ஆன்மீக
மக்கள் விரும்புவதால் பூஜை செய்கிறேன்.
தெர்மோகோல் மூலம் தயாரிக்கப்பட்டு, ‘பல்லிவல்’ மீது அமர்ந்திருக்கும் கொரோனா தேவி எந்த ‘மூலமந்திரமும்’ இல்லாத தெய்வம் ஆகும்.
கேரளாவில், பெரியம்மை நோய்க்கான தெய்வம் உள்ளது, இது யாரையும் கேலி செய்யும் முயற்சி அல்ல, அனைத்து பூஜைகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யப்படும். இந்து புராணங்களின்படி, கடவுள் எங்கும் நிறைந்தவர், வைரஸில் கூட இருக்கிறார். ஒரு வைரஸை தேவி என்று வணங்குவது எங்களுக்கு ஒரு புதிய வழக்கம் அல்ல.
தரிசனம் இல்லை என்றாலும், கொரோனா தேவியின் பிரசாதம் பக்தர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும். இந்த ஆலயம் சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் உள்ளிட்ட கொரோனா வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்கிறார் அனிலன்.
அதேநேரத்தில் பூஜைகள் மற்றும் பிரசாதங்களுக்கு நான் பணம் வசூலிக்க மாட்டேன் என்றும் அவர் உறுதிபடக் கூறி உள்ளார்.