
புதுதில்லி:
சீனாவுக்கும் பூடானுக்கும் ஏற்கெனவே பிரச்னையில் இருந்துவரும் எல்லைப் பகுதியில் சீனாவின் பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி, சாலைக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சிக்கிம் பகுதியில் இந்தியா, சீனா, நேபாள எல்லைகளின் மும்முனைச் சந்திப்பில் உள்ளது டோக்லாம். இந்த இடம் தங்களுக்கு சொந்தம் எனக் கூறி அங்கு சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதற்கு இந்தியாவும், பூடானும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் இந்திய நிலப் பகுதியில் ராணுவ போஸ்ட்களை அத்துமீறித் தாக்கியது சீன ராணுவம். இதை அடுத்து அங்கே இந்தியா தனது ராணுவத்தை கூடுதலாக நிறுத்தி வருகிறது. எனவே பதிலுக்கு பதில் எனும் வகையில், பழைய 1961ம் வருட போரை இந்தியா நினைவில் கொண்டு சீனா மீதான கடும் போட்டி மனப்பான்மையை கைவிட வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் சீனா செயல்பட்டது. இது இந்தியத் தரப்புக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்தியா தனது ராணுவத்தை வாபஸ் பெறும்படி சீனா வலியுறுத்தி வருகிறது. மேலும் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்திடம் இது குறித்து எச்சரிக்கையையும் விடுத்து வந்தது சீனா.
இந்நிலையில், எல்லைப் பகுதிக்கு உடனடியாக விரைந்தார் இந்திய ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத். காங்டாக்கின் 17 மலைப்பிரிவு தலைமையகம் மற்றும் கால்போங்கில் 27 மலைப் பிரிவு ராணுவ தலைமையகத்தை பார்வையிட்டு பிபின் ராவத் ஆய்வு நடத்தி வருகிறார். ஆய்வு முடிந்து, ராணுவ தளபதி இன்று மாலை தில்லி திரும்புகிறார். இதை அடுத்து 33 கார்ப்ஸ் மற்றும் 17 பிரிவு தளபதிகள் உள்பட அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொள்ளும் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சீனாவுக்கு பதிலடியாக, எல்லைப் பகுதியில் இந்தியாவும் 3000 ராணுவ துருப்புகளை நிறுத்தியுள்ளது.


