
மும்பை:
ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாஜக., பிரமுகர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப் பட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ரவீந்திர பவாந்தாடே (48). இவர் கடந்த மாதம் 27 ஆம் தேதி நாக்பூரில் இருந்து சந்திராபூர் நோக்கி பஸ்சில் சென்று கொண்டிருந்த போது, தன்னுடன் வந்த பெண்ணை பஸ் உள்ளேயே வைத்து முத்தமிட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிலர் செல்போனில் படமும் எடுத்துள்ளனர். அந்தப் படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், தனக்கு வேலை வாங்கித் தருவதாகவும்ம் தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார் என்றும், தன்னை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாகவும் போலீசில் புகார் அளித்தார். மேலும், பவாந்தாடே அரசியல் ரீதியாக முக்கியப் புள்ளி என்பதால், போலீஸார் வழக்கைப் பதிவு செய்ய மறுப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவாந்தாடேவை கைது செய்துள்ளதாகவும், 6ஆம்தேதி வரை காவலில் வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ரவீந்திர பவாந்தாடே, பள்ளியில் ஆசிரியராகவும் உள்ளார்.
இதனிடையே, ரவீந்திர பவாந்தாடேவை சில மாதங்களுக்கு முன்பே கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக மாநில பா.ஜ.க. கூறியுள்ளது. அவர் கட்சிக் கூட்டங்களை தொடர்ந்து புறக்கணித்ததால் கட்சிப் பொறுப்பில் இருந்து ஏற்கெனவே நீக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் நேத்தே கூறியுள்ளார்.


