
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் புனிதத் தலம் ஒன்றைக் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் தகவல் பதிவு செய்யப்பட்டது. இது வைரலாகப் பரவியதால், பாதுரியா பகுதியில் மதக் கலவரம் ஏற்பட்டது. இரு வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே பிரச்னை பூதாகாரமாக வெடித்தது. இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை மூண்டது. எனவே அப்பகுதி போர்க்களமாகக் காட்சியளித்தது.
இந்நிலையில் அருகில் உள்ள பகுதிகளுக்கும் கலவரம் பரவியது. இதையடுத்து, கலவரக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடைகளை அடித்து நொறுக்கினர். போலீசார் குவிக்கப்பட்டும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. எனவே, 4 கம்பெனி எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் (400 வீரர்கள்) வரவழைக்கப்பட்டனர். இவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் மாநில போலீசாருக்கு உதவியாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி மற்றும் முதல் மந்திரி மம்தா பானர்ஜியிடம், மாநிலத்தில் நிலவும் நிலைமை குறித்து முழு விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என எழுத்து பூர்வமாக கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோரிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனித்தனியாக தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். பதற்றம் நிறைந்த பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிந்துகொண்டார். மாநிலத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சரிடம் இருவரும் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் குறித்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. ஒருவரை கீழே தள்ளி கல்லைக் காலில் போட்டு கொடூரச் செயலில் ஈடுபடும் ஒருவர் குறித்த வீடியோ பேஸ்புக்கில் பரவி வருகிறது.


