பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள்: வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

Published:

Cells Were Left Unlocked For VK Sasikala s Personal Use - 2026

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனை அவர் பயன்படுத்தினார் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தாலும், அவருக்கு சிறையில் எந்தவொரு சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்றும், சாதாரண கைதி போலவே அவர் நடத்தப்படுகிறார் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் கூறி வந்தனர்.

இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 10ஆம் தேதி டிஐஜி.,யாக இருந்த ரூபா ஆய்வு செய்து, அங்கு சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இதுதொடர்பாக கடந்த 12ஆம் தேதி சிறைத்துறை டிஜிபி.,யாக இருந்த சத்தியநாராயண ராவிடம் அவர் அறிக்கையும் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்பட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். இதனை சத்தியநாராயண ராவ் மறுத்து வந்தார்.

இந்நிலையில் சசிகலாவை சந்திக்க வருபவர்களுடன், அவர் பேசுவதற்காக தனி அறை ஒதுக்கப்பட்டு அங்கு நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது. மேலும் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

சசிகலா தூங்குவதற்கு வசதியாக ஒரு அறையும் (பெட்ரூம்), தனி சமையல் அறையும், அவர் பயன்படுத்தும் பொருட்கள் வைக்க ஓர் அறையும், அவரை சந்திக்க சிறைக்கு வருபவர்களுடன் பேசுவதற்காக பார்வையாளர் அறையும், யோகா உள்ளிட்ட உடற்பயிற்சி செய்ய மற்றொரு அறையும் என மொத்தம் 5 அறைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறைகள் பற்றி வெளியே தெரியாதபடி முன்பக்க கதவுகளில் துணி போட்டு மூடப்பட்டுள்ளன. சசிகலா தங்கி இருக்கும் சிறை அறைக்கு மற்ற பெண் கைதிகள் செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பாக, இரும்புக் கதவு உள்ளது.

ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ரூபா கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில், சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டு இருப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று ‘டைம்ஸ் நவ்’ மற்றும் சில கன்னட தொலைக்காட்சி சேனல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியானது.

சிறையில் ஆய்வு செய்தபோது தான் எடுத்திருந்த வீடியோ காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதாக ரூபா தனது 2 ஆவது அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறி வெளியான வீடியோ காட்சிகள் சசிகலா அறைதானா என்பதை கர்நாடக சிறை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

Related articles

Recent articles

spot_img