பெங்களூர்:
கர்நாடக ஊடகங்களில் வெளியாகி வரும் சசிகலா சிறைவாசம் குறித்த வீடியோக்களால் மாநில அரசியல் கலகலத்துப் போய்க் கிடக்கிறது. இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வரக் காரணமான ரூபா, சிறைத்துறையில் இருந்து போக்குவரத்துத் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பதிலடியாக, சசிகலாவும் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து தும்கூர் சிறைக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவிடம் அக்ராஹார சிறையில் நடந்த விதிமீறல்கள் குறித்த சில முக்கிய வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும், விரைவில் அவற்றை அவர் வெளியிடுவார் என்றும் ஊடக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
முன்னதாக, பெங்களூர் சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவுக்கு தனி சமையலைறை உட்பட பல வசதிகளை சிறையில் செய்து கொடுத்திருப்பதாகவும், இதற்காக சிறை அதிகாரிகள் சிலருக்கு ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும் சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரிக்க ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு விசாரணையே தொடங்காத நிலையில், சிறையில் நடந்த விதிமிறல்கள் குறித்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக ரூபா மீண்டும் புகார் கூறினார். இதனிடையே அவர் போக்குவரத்துப் பிரிவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சிறையில் நிகழ்ந்த முறைகேடுகள் வீடியோக்களாக கர்நாடக ஊடகங்களில் வலம் வருகின்றன. வீடியோ ஆதாரங்கள் அழிக்கப் பட்டு விட்டதாக ரூபா கூறிய நிலையில், இத்தகைய வீடியோக்கள் வலம் வருவது கவனிக்கத் தக்கது. இருப்பினும், அவர் தன்னிடம் உள்ள சில முக்கிய வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை பத்திரிக்கையாளர்கள் மூலம் வெளியிடக் கூடும் என்று கூறப் படுகிறது. எனவே, டிஐஜி ரூபாவிடம் இருந்து எந்த நேரத்திலும் பரபரப்பான தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, சிறை விதிமுறையை மீறியதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து தும்கூர் பெண்கள் சிறைக்கு மாற்ற கர்நாடக உள்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா சகல வசதிகளுடன் இருக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற கர்நாடக உள்துறை முடிவு செய்துள்ளதாம். கர்நாடக மாவட்டம் தும்கூர் சிறைக்கு சசிகலாவை மாற்ற திட்டமிட்டுள்ளனர். இதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உத்தரவு பெற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் உடனடியாக அவ்வாறு மாற்ற முடியாது என்றும், 15 நாள் முதல் 1 மாதம் வரை ஆகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் சிறைத்துறை விதி மீறல் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் இன்று சிறை கைதிகளிடம் விசாரணை நடத்தப் பட்டது.


