
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? மேலும் தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை? என்று நாடாளுமன்ற மேல்சபையில் அஇஅதிமுக எம்.பி. டாக்டர் வா. மைத்ரேயன் கேள்வி எழுப்பினார்.
டாக்டர் வா. மைத்ரேயன் கேள்வி: தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்க கோரிக்கை மத்திய அரசுக்கு வைக்கப்பட்டதா? அப்படியெனில் அதன் விபரம் மற்றும் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? மேலும் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக மத்திய அரசு மேற்கொண்ட தகுந்த நடவடிக்கைகள் யாவை?
இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஃபகன் சிங் குலாஸ்தே அளித்த பதில்:
ஆமாம். தமிழ்நாட்டில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி கோரிக்கை பெறப்பட்டது. 2015-16 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதி அமைச்சர் தமிழ்நாடு உட்பட ஆறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார். அதன்படி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் தகுதி வாய்ந்த 3 அல்லது 4 இடங்களை தேர்வு செய்யுமாறு மத்திய அரசு தமிழக அரசை கேட்டுக்கொண்டது. இதன் பிறகு கடிதம் வாயிலாக பல முறை மேற்கொண்ட கருத்து பரிமாற்றத்திற்கு பிறகு தமிழக அரசிடமிருந்து 12.7.2017 அன்று கிடைக்கப்பெற்ற கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கருத்து அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இந்தியாவில் தற்போது 6 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. மேலும் நாட்டில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் 14 புதிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள 73 அரசு மருத்துவமனை/ கல்லூரிகள் மேம்பாட்டிற்காக தேர்வு செய்யப்பட்டு நான்கு கட்டமாக செயல்படுத்தப்படும். இதில் முதல் கட்டமாக சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையும், இரண்டாம் கட்டமாக மதுரை அரசு மருத்துவமனையும், மூன்றாம் கட்டத்தில் தஞ்சாவூர், திருநெல்வேலி மருத்துவமனைகளும் மேம்படுத்தப்படும்.


