
புது தில்லி:
மோடியின் ஒத்துழைப்பு, மரியாதையான நடத்தை, வண்ண வண்ண வானவில் நினைவுகளுடன் விடைபெறுகிறேன் என்று பிரிவுபசார விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உருக்கமாகப் பேசினார்.
நாட்டின் 13ஆவது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நாளை (25 ஆம் தேதி) நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்கிறார். இதையொட்டி, பிரணாப் முகர்ஜிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த குமார், மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த பிரிவுபசார விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உருக்கமாகப் பேசினார். அப்போது அவர், “நான் இந்த நாடாளுமன்றத்தால்தான் உருவாக்கப்பட்டேன். இந்த நாடாளுமன்றம்தான், எனது அரசியல் கண்ணோட்டம், ஆளுமையை வடிவமைத்தது. 48 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் புனிதமான அமைப்பின் நுழைவாயில்களில் நான் நுழைந்தபோது எனக்கு 34 வயது. 1969 ஜூலை, நான் இந்த நாடாளுமன்றத்துக்கு, மேற்கு வங்காளத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக வந்தேன். நான் முதன்முதலாக 1969, ஜூலை 22ல் நடந்த கூட்டத் தொடரில்தான் முதல்முறையாக கலந்துகொண்டேன்.
அதிலிருந்து 37 ஆண்டுகாலம் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் என பல வடிவங்களில் பணியாற்றியிருக்கிறேன். இவற்றில் 5 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 2 முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளேன். எனது மிக நீண்ட வாழ்க்கை பயிற்றுவிப்பதையும், கற்பதையும் கொண்டது. நான் நாடாளுமன்றத்தில் நுழைந்தபோது, மாநிலங்களவை முற்றிலும் அனுபவம் வாய்ந்த நாடாளுமன்றவாதிகளையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும் கொண்டிருந்தது. நாடாளுமன்றத்தில், பி.வி. நரசிம்மராவின் விவேகம், வாஜ்பாயின் பேச்சாற்றல், டாக்டர் மன்மோகன் சிங்கின் அமைதி, அத்வானியின் முதிர்ந்த அறிவுரை, சோனியா காந்தியின் ஆர்வமுள்ள ஆதரவு ஆகியவை என்னை மெருகேற்றின.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சந்தேகத்துக்கு இடமின்றி இந்திரா காந்தியால் வழிநடத்தப்பட்டேன். அவரது உறுதி, சிந்தனை, தெளிவான செயல்கள், உயர்ந்த ஆளுமை அவரை உயர்த்தியது. அந்த நாட்களில், நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் சமூகம் மற்றும் நிதி சட்டங்களுக்கான தெளிவான விவாதங்கள் நடைபெற்றன. பிரபலங்களின் பேச்சுகளை ஆளுங்கட்சி வரிசையில் அல்லது எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு நான் கேட்டிருக்கிறேன். அப்போது, இந்த நாடாளுமன்றத்தின் ஆன்மாவை உணர்ந்தேன். விவாதத்தின் உண்மையான மதிப்பைப் புரிந்து கொண்டேன்.
இப்போது சட்டங்களை இயற்றுவதற்கு ஒதுக்குகிற நேரம் குறைந்து வருவது துரதிர்ஷ்டவசமானது. நாடாளுமன்றம் சட்டம் இயற்றுகிற பங்களிப்பை செய்யத் தவறுகிற போது அல்லது விவாதமின்றி சட்டம் இயற்றுகிறபோது, இந்த மாபெரும் தேசத்தின் மக்கள் நம்மீது வைத்த நம்பிக்கையை மீறுவதாக நான் உணர்கிறேன். நாடாளுமன்றம் கூடாதபோது, அவசரச் சட்டம் இயற்றுகிற அதிகாரத்தை அரசு கொண்டுள்ளது. ஆனால் அவசரச் சட்டங்களை வேறு வழி இல்லை என்ற நெருக்கடியான சூழல்களில் மட்டுமே கொண்டு வர வேண்டும். பண விவகாரங்களில் அவசரச் சட்டம் கூடாது. நாடாளுமன்ற மக்களவையின் 543 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 245 உறுப்பினர்கள் என 788 பேரின் குரலும் முக்கியம்.
2012 ஜூலை 22ல் நான் 13வது குடியரசுத் தலைவராகத் தேர்வாகி அறிவிக்கப்பட்டபோது என் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி முடிவுக்கு வந்தது. 37 ஆண்டு கால நாடாளுமன்றப் பணி முடிந்தாலும், இந்த அமைப்புடன் நான் தொடர்பு கொண்டுள்ளேன். உண்மையாகச் சொல்வதானால், நான் இதன் ஒருங்கிணைந்த அங்கமானேன். இந்த 5 ஆண்டுகளில், அரசியல் சாசனத்தை கட்டிக் காக்க சொல்லாலும், செயலாலும் முயற்சித்துள்ளேன்.
ஒவ்வொரு நிலையிலும், பிரதமர் மோடியின் ஒத்துழைப்பில் பெரிதும் பயனடைந்துள்ளேன். அவர் நாட்டில் முக்கிய மாற்றங்களுக்கு வழிகோலியிருக்கிகிறார். எங்கள் தொடர்பின், இனிமையான, மரியாதையான நடத்தையின் நினைவுகளைச் சுமந்து கொண்டு செல்கிறேன். நான் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்கிற போது, நாடாளுமன்றத்துடனான எனது தொடர்பும் முடிவுக்கு வருகிறது. நான் இனி இந்த நாடாளுமன்றத்தின் அங்கம் இல்லை. இது சற்றே துயரமானதுதான்! வண்ண வண்ண வானவில் நினைவுகளுடன் இந்த அற்புதமான கட்டடத்தை விட்டு விடைபெற்று செல்கிறேன். இந்த மாபெரும் தேசத்தில், ஒரு தாழ்மையான ஊழியனாக மக்களுக்கு சேவையாற்றிய பரிபூரணமான உணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் விடைபெறுகிறேன் என்று உருக்கமாகப் பேசினார்.



