கேரளாவை உலுக்கிய லவ் ஜிஹாத் வழக்கில், மதமாற்றப்பட்ட ஹாதியா, ஆயிஷா இருவரின் பின்னணியில் ஒரே நபர்தான் தொடர்பில் இருந்ததாக என்.ஐ.ஏ. கண்டறிந்துள்ளது. இஸ்லாத்தை வலுக்கட்டாயமாகத் திணிப்பதற்கு வழிகாட்டியாக இருந்தவர் குறித்து என்.ஐ.ஏ., குறிப்பிட்டுள்ளது.
அதன் அறிக்கைப் படி, சைநாபா என்பவர், இஸ்லாமிய பழைமைவாத அமைப்பான பாபுலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் தொடர்பில் உள்ளவர் என்று தெரியவந்தது. அந்த இரு இளம்பெண்களையும் இஸ்லாம் குறித்து அறிவுறுத்தி, மாற்றுவதற்கான பணியில், பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ, மார்கழுள் ஹிதய சத்யசரணி ஆகிய அமைப்புகளின் பின்னணியில் இருந்த சைநாபா ஈடுபட்டார் என்று தெரியவந்தது.
மதம் மாறுவதற்கு முன்பு ஹாதியா, சைநாபா வுடன் தான் தங்கியிருந்தார். அவர், பிஎஃப்ஐ.,யின் தேசிய பெண்கள் பிரிவின் தலைமையில் இருந்தார். என்.ஐ.எ.,யின் அறிக்கையின் படி, குடும்பத்தில் ஏதேனும் பிரச்னைகளுடனோ, தகராறில் ஈடுபட்டோ, மனஸ்தாபங்களுடனோ வெளியில் வந்து தங்கியிருக்கும் ஹிந்துப் பெண்களின் மனத்தைப் பார்த்து, அவர்களை அணுகி, அவர்கள் மனதில் இஸ்லாம் குறித்து போதனை செய்து, பலவந்தமாக இஸ்லாத்துக்கு மாற்றிவிடுகிறார்கள் என்பது தெரிந்தது.
பிஎஃப்.ஐ, எஸ்டிபிஐ ஆகிய இயக்கங்களுடன் தொடர்புடைய மொகம்மத் குட்டி தொடர்பாகவும், அவர் ஹாதியாவை அவரது குடும்பத்தில் இருந்து பிரித்து வீட்டில் இருந்து வெளியேற வைத்த விவகாரம் குறித்தும் என்.ஐ.ஏ., தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதே நேரம், பிஎஃப்ஐ கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி வரும் நிலையில், ஹாதியா மற்றும் ஆயிஷா இருவருமே தாங்கள் விருப்பப் பட்டு இஸ்லாத்துக்கு மாறியதாகக் கூறினர்.
அண்மைக் காலத்தில் ஆயிஷா மற்றும் ஹாதியா இருவரும் இஸ்லாத்துக்கு மதம் மாறிய பின்னர் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து கேரளத்தில் பெரும் பரபரப்பு சர்ச்சையும் நிலவி வருகிறது. கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பானது, தேசிய அளவில் ஒரு விவாதப் பொருளாக இவ்விவகாரத்தை மாற்றியிருக்கிறது.
கோட்டயத்தைச் சேர்ந்த அகிலா அசோகன் என்பவர், ஷாஃபின் ஜஹான் என்பவரை ஹாதியா எனப் பெயர் மாற்றிக் கொண்டு திருமணம் செய்தார். அவரது தந்தை கேரள நீதிமன்றத்தில் புகார் செய்ய, நீதிமன்றம் இதனை லவ் ஜிஹாத் என அறிவித்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தை ஷாஃபின் ஜஹான் அணுக, தேசிய புலனாய்வு முகமையின் உதவியில் கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அணுக உச்ச நீதிமன்றம் கூறியது.
அடுத்து, பாலக்காட்டைச் சேர்ந்த ஆதிரா நம்பியார் என்பவர், இஸ்லாத்தைக் கற்பதற்காக பெற்றோரை விட்டு, வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்து ஒரு மாதம் கழித்து ஆயிஷா என்ற பெயருடன் வந்தவர், தனது பெற்றோர் தன்னை இந்து மதத்துக்கு மாறும் படி கட்டாயப் படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தக் கோரி கேரள நீதிமன்றத்தை அணுகினார். இந்த இரு சம்பவங்களின் பின்னணியில் இந்த வழக்கு என்.ஐ.ஏ., விசாரணைக்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது.