புது தில்லி :
ஆயுதப் பற்றாக்குறை ராணுவத்தில் உள்ளது என்றும், போர் வந்தால் தேவையான வெடிமருந்துகள், தளவாடங்கள் இல்லை என்றும் கூறி, சிஏஜி ஓர் அதிர்ச்சி அறிகையை அளித்திருந்தது. நாடாளுமன்றத்தில் அண்மையில் மத்திய கணக்கு தணிக்கை அமைப்பான சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில், பாதுகாப்பு துறையில் ஆயுத தளவாடங்கள் பற்றாக்குறையாக உள்ளது. 40 நாட்கள் போர் நடந்தால், 20 நாட்களுக்குச் சமாளிக்கும் அளவே தளவாடங்கள் உள்ளன என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதிதாக ராணுவ அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனிடம், சிஏஜி அளித்த அறிக்கை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அந்த அறிக்கை தவறானது. பாதுகாப்பு துறையில் ஆயுதப் பற்றாக்குறை என்பது இல்லவே இல்லை. இது குறித்து விவாதம் நடத்தி, பிரச்னை ஆக்குவதும் தேவையற்றது. நான் ராணுவ அமைச்சராகப் பொறுப்பேற்ற உடன் மூத்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களிடம் பேசினேன். ஆயுதங்கள் வாங்குவது என்பது தொடர்ச்சியாக நடக்கும் ஒரு நடைமுறை. இதில் பற்றாக்குறை எப்படி வர முடியும்?” என கேள்வி எழுப்பினார்.



