கர்நாடக மாநிலத்தில் கிராமம் ஒன்றில் உள்ள ஆட்டுப் பண்ணையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1350 கிலோ கஞ்சா போதைப்பொருளை பெங்களூரு காவல்துறையினர் கைப்பற்றி, கடத்தல் கும்பலையும் கைது செய்துள்ளனர்.
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநரிடம் சேஷாத்ரிபுரம் காவல்துறை நடத்திய விசாரணையில் கஞ்சா விவகாரம் வெளியே வந்துள்ளது. இதுதொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலாபுராகி மாவட்டத்தில் கலாஜி என்ற கிராமத்தில் சந்திரகாந்த் என்பவருக்குச் சொந்தமான ஆட்டுப் பண்ணையில் 1350 கிலோ மதிப்பிலான கஞ்சா மறைத்துவைக்கப்பட்டிருந்தது.
தினமும் காய்கறிகள் கொண்டுவரப்படும் வாகனங்கள் மூலம் ஒடிசாவில் இருந்து கர்நாடகாவுக்கு கஞ்சா கடத்தப்பட்டுள்ளது.
கர்நாடகா மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா மாநிலங்களிலும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டுள்ளதில் கைதான நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.
நான்கு பேரில் ஒருவர் பெங்களுரூவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஜனசேகர், அவர் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்து வந்திருக்கிறார். மற்ற மூவரும் கஞ்சா கடத்தல் தொடர்பான பல பணிகளைச் செய்துள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
ஊரடங்கு காலத்தில் பிழைப்பதற்காக வழிதேடியவர்கள் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கஞ்சா விற்பனை செய்துவந்துள்ளனர்.