தில்லியில் பலரிடம் அரசாங்க வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லியை சேர்ந்த அனிதா திமான் (57) என்ற கணவனை இழந்த பெண் சப்தர்ஜங் என்க்ளேவில் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இவர் திமான், முகேஷ் குமார் என்ற நபரிடம் தொடர்பு கொண்டு தனக்கு அரசு அதிகாரிகளிடம் அதிகம் பழக்கம் உள்ளதாகவும், தான் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய முகேஷ் 4.45லட்சம் வரை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு பல மாதங்களாக வேலை வாங்கி தருவதாக கூறி அந்த பெண் அவரை ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால் முகேஷும் அவரது சகோதரர் மனோஜும் அங்குள்ள காவல்நிலையத்தில் அந்த பெண்ணின் மீது புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார் அந்த பெண் மீது பல மாவட்டங்களில் இதே போல் மோசடி புகார் உள்ளதை கண்டறிந்தனர்.
அந்த பெண் பலரிடம் தனக்கு அரசு அதிகாரிகளிடம் பழக்கம் உள்ளதாகவும், அரசு வேலைகள், அரசு சான்றிதழ்கள் என அனைத்தும் பணம் கொடுத்தால் வாங்கித்தருவதாகவும் கூறி மோசடி செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.