புது தில்லி:
ஜெயலலிதாவின் மகள் நான் தான் என உரிமை கோரி, பெங்களூரைச் சேர்ந்த பெண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், வாரிசு என்ற வகையில் மட்டுமல்ல, தானே ஜெயலலிதாவின் மகள் என்று அறிவிக்கக் கோரி, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா (38) போராடி வருகிறார்.
அவ்வகையில், ஜெயலலிதாவே தனது தாய் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மஞ்சுளா. அவர், இதுகுறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், ஜெயலிதாவின் மகள் என தன்னை அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் மஞ்சுளா. அதில், ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்க வேண்டும் என்றும், அவர் என் தாய்தான் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
‘1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி ஜெயலலிதாவின் மகளாக நான் பிறந்தேன். என் வளர்ப்புத் தாய் சைலஜா 2015ல் இறந்துவிட்டார். வளர்ப்புத் தந்தை சாரதி இந்த ஆண்டு மார்ச் 20ல் இறந்துவிட்டார். ஜெயலலிதாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இதனை வெளியில் சொல்லவில்லை. எனவே, ஜெயலலிதாவே என் தாய் என்பதை நிரூபிக்க, மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலைத் தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும், தான் பிறந்த வைணவ பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட வேண்டும்’ என அந்த மனுவில் மஞ்சுளா கோரியுள்ளார்.
அவரின் கோரிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று ஆய்வுக்கு ஏற்கவுள்ளது. நீதிபதி மதன் பி.லோகூர் தலைமையிலான அமர்வு இந்த மனுவை ஆய்வு செய்கிறது. அப்போது அம்ருதாவின் மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது தெரியும்.
இருப்பினும், மீண்டும் மீண்டும் மஞ்சுளா, ஜெயலலிதாவே தன் தாய் எனக் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.