புது தில்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கில், வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி இறுதி வாதம் தொடங்கும் என்று சி.பி.ஐ. தனி நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கனிமொழியின் கோரிக்கையின்படி, அவர் கலைஞர் டி.வி.யின் இயக்குனர் பதவியில் இருந்து விலகியதற்கான கடித நகலை நீதிமன்ற உத்தரவின்பேரில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அதிகாரி நவில் கபூர் நேற்று சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். சாட்சி விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் இறுதி வாதம் வரும் ஏப்,15 ஆம் தேதி தொடங்கும் என்று நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்து அதற்கான உத்தரவை பிறப்பித்தார். முன்னதாக, 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., சித்தார்த் பெகுரா, ஆர்.கே. சொந்தாலியா உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தில்லி சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. சி.பி.ஐ. தரப்பில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, கார்ப்பரேட் நிறுவனங்களின் தரகர் நீரா ராடியா, முன்னாள் அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி.யின் முன்னாள் இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட 29 பேர்களின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டன.
ஏப்.15ல் 2ஜி வழக்கின் இறுதி வாதம்: சி.பி.ஐ. தனி நீதிமன்றம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

