காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தியை காணவில்லை; அவரை கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு என்று அவரது அமேதி தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலமாக ராகுல் காந்தியைக் காணவில்லை என்று செய்திகள் வெளிவருவது வழக்கமாகிவிட்டது. அதற்கு பதிலளிக்கும்வண்ணம், அவர் வருவார் வருவார் என காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளிப்பதும் வழக்கமாகி விட்டது. இந்நிலையில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமேதி தொகுதி மக்கள், ராகுல் காந்தியைக் காணவில்லை, அவரைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு என்ற போஸ்டர்களை தொகுதி முழுவதும் ஒட்டியுள்ளனர். அமேதி தொகுதி மட்டுமல்லாது உத்தரப் பிரதேசத்தில் பல பகுதிகளிலும் இது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றில், ‘தலைவர் இல்லாத அமேதி’ என்ற தலைப்புடன் இந்தி திரைப்பட பாடல் ஒன்றும் காணப்படுகிறது. மேலும், அமேதியில் சாலைகள் மோசமாக உள்ளன என்றும், மட்டமான சுகாதார சேவைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் எழுதி, இப்படிக்கு அமேதி மக்கள் என்று கீழே இறுதியாகக் கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் முன்னர் ஒட்டப்பட்ட போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே இந்தில் ஈடுபட்டார் என்ற காரணம் காட்டி அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இவ்வாறு ஒட்டப் பட்டுள்ள போஸ்டர்கள் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளன.
ராகுலைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு: அமேதி தொகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!
Popular Categories


