புது தில்லி: சென்னையில் தனியார் டிவி ஒன்றின் மீது நிகழ்த்தப் பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து இன்று மாநிலங்களவையில் திமுக எம்.பி., கனிமொழி பிரச்னை எழுப்பிப் பேசினார். முன்னதாக, கம்யூனிஸ்ட் எம்பி., டி.ராஜா இது குறித்துப் பேச எழுந்தார். ஆனால், அவைத்தலைவர் குரியன், இது குறித்துப் பேச ஏற்கெனவே கனிமொழி அனுமதி கோரியிருப்பதாகக் கூறினார். பின்னர் இது குறித்து மாநிலங்களவையில் பேசிய கனிமொழி, ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்தும் விதத்தில் புதிய தலைமுறை அலுவலகம் மீது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், எழுத்தாளார் பெருமாள்முருகன் மீதான தாக்குதல் குறித்தும் பேசினார். அப்போது, அதிமுக எம்பிக்கள் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குறுக்கிட்டு தொடர்ந்து பேசிய கனிமொழி, தமிழக அரசுக்கு எதிராகப் பேசவில்லை, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்றே இதனைக் குறிப்பிடுகிறேன் என்று தெரிவித்தார். சென்னையில் உள்ள தனியார் செய்தித் தொலைக்காட்சி அலுவலக வாசலில் இன்று குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று அதிகாலை அலுவலக வாசலில் 2 பைக்கில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் 2 டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசிச் சென்றனர். இந்த குண்டுகள் வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் டிவி மீதான தாக்குதல்: மாநிலங்களவையில் கனிமொழி கண்டனம்
Popular Categories


