
தில்லியில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத், திடீரென்று மயக்கம் அடைந்த பயணி ஒருவருக்கு முதலுதவி அளித்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
தில்லியில் இருந்து மும்பைக்கு நவம்பர் 16 அதிகாலை இண்டிகோ விமானம் ஒன்று சென்றது. அந்த விமானத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத்தும் சென்றிருந்தார்.
இதனிடையே அதிகாலை சுமார் 2 மணியளவில் விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது விமானப் பணிப்பெண் ஒருவர் அவசரமாக மருத்துவ சிகிச்சைக்கு டாக்டர் உதவி வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து விமானப் பணிப்பெண்ணிடம் பிரச்சனை குறித்து கேட்டு தெரிந்து கொண்ட மத்திய இணையமைச்சர் பகவத் காரத், முதலுதவி தேவைப்பட்ட நபருக்கு சிகிச்சை அளித்தார். அவர் மயக்கம் நிலையில் இருந்த பயணியின் சட்டையை கழற்றி அவரது இதயத்திற்கு ரத்தம் செல்லும் வகையில் கால்களை உயர்த்தி தலையணையை வைத்தார்.
உடனடியாக சுயநினைவு அடைந்த பயணிக்கு குளுக்கோஸ் அளிக்கப்பட்ட நிலையில் பயணி கண் விழித்தார். இது அங்கிருந்தவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தக்க சமயத்தில் பயணியின் உயிரை காப்பாற்றிய மத்திய இணையமைச்சருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. அதற்கு பிரதமர் மோடி ‘அவர் இதயத்தில் எப்போதும் மருத்துவர்’ என்று பதிவிட்டிருந்தார்.
இந்தப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்திய இணையமைச்சர் பகவத் காரத் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.