பெங்களூரு: மேகதாது அணைத் திட்டங்கள் குறித்து, தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால், தமிழகத்துடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று கூறினார் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல். நேற்று கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை குறித்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும் என்று முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். இந்நிலையில் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் இது குறித்து கூறியபோது, கர்நாடக பட்ஜெட்டில் நீர்ப்பாசனத் துறைக்கு ரூ.12,956 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு தேவைப்படும் திட்டங்களை கொண்டு வருவோம். காவிரியின் உபரிநீரை கர்நாடகம் முழுமையாகப் பயன்படுத்துவது தொடர்பாக புதிய நீர்க் கொள்கை வகுக்கப்படும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறியுள்ள அளவுப்படி, தமிழ்நாட்டுக்கு உரிய நீர் வழங்கப்படும். ஆனால், மேகதாதுவில் புதிய தடுப்பணைகள் கட்டுவதற்கு தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவிப்பது சரியல்ல. மேகதாது விஷயத்தில் தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகளின் போராட்டம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. எனவே மேகதாது திட்டம் குறித்து தமிழக அரசுடன் கர்நாடகா பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. கர்நாடக எல்லைக்குள் மக்களின் நலனுக்காக புதிய திட்டங்களை உருவாக்குவது கர்நாடக அரசின் உரிமை. இதில் தமிழ்நாடு தலையிட முடியாது. மேகதாது கூட்டுக் குடிநீர் திட்ட வரைவு கடந்த 10 மாதங்களாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு, மத்திய சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைத்தவுடன் அங்கே தடுப்பணைகள் கட்டும் பணி தொடங்கப்படும். அணை கட்டுமானப் பணிகளுக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் 6 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பித்துள்ளன என்று கூறினார்.
மேகதாது- தமிழகத்துடன் பேச விரும்பவில்லை; காவிரி நீர் உரிய முறையில் வழங்கப் படும்: எம்.பி. பாட்டீல்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

