பாரதியார் பிறந்த நாளன்று நடைபெற்ற பன்மொழி புலவர் சபையில், மலையாளம், கன்னடம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கவிதைகளை வாசித்து, பாரதியின் பல மொழி ஒருமைப்பாட்டு சிந்தனைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
மகாகவிக்கு அஞ்சலி
- ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட்
இந்திய அரசு நம் பாட்டரசன் சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாளை ‘பாரதிய பாஷா திவஸ்’ (இந்திய மொழி தினமாக) கொண்டாடி வருகிறது. பல மொழிகளை அறிந்த முண்டாசு கட்டிய கவிஞனின் பிறந்த நாளை இந்திய மொழி தினமாக கொண்டாடுவது சாலச் சிறந்ததாக உள்ளது.
பிற மொழிகளில் உள்ள நல்ல விஷயங்கள், நல்ல ஆசிரியர்களின் படைப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும். தமிழிலும் நல்ல நூல்களை இயற்ற வேண்டும் என்ற பாரதியின் கூற்றிலிருந்தே அவர் பல மொழிகளில் ஆர்வம் கொண்டவராகவும், பிற மொழிகளையும் மதிப்பவராகவும் விளங்கினார் என்று அறிய முடிகிறது.
நாம் நம் பாரதியைப் பற்றியோ அவர்தம் கவிதைகளை சபைகளில் வாசிக்கும் போதோ சபையினர் அவருக்கும் கொடுக்கும் மரியாதையை பார்க்கும் போது ஒரு தமிழச்சியாக எனக்கு ஒரு செருக்கு வருகிறது என்பதே உண்மை.
உதாரணமாக, ஹைதராபாத் நகரத்தில் இருந்து இயங்கி வரும் காவிய காமுதி அகில உலக பன்மொழிப் புலவர்கள் குழுமத்தினால் ஒவ்வொரு மாதமும் ‘ஆன்லைனில்’ புலவர்கள் சபை நடத்தப்பட்டு வருகிறது.
நான் 30 மாதங்களாக அந்நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளேன். தமிழில் என் கவிதையை அதில் வாசித்து வந்துள்ளேன். கடந்த வருடம், பாரதியின் பிறந்த நாளன்று பன்மொழி புலவர்கள் சபை நடத்தப்பட்டது. ஆங்கிலம் தவிர வேறு மொழியில் கவிதையை வாசிப்பவர்கள், அவர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தோ அல்லது கவிதைகளின் சாரத்தையோ ஆங்கிலத்தில் விளக்குவர்.
பாரதியின் பிறந்த நாளன்று நடந்த நிகழ்ச்சியில் நான் பாரதியாரால் மனிதனின் கடமையாய் கூறப்பட்டுள்ள ‘பிறர் துயர் தீர்த்தல்’ மற்றும் ‘பிறர் நலம் வேண்டுதல்’ – இந்த இரண்டு பண்புகளையும் எடுத்துக் கூறினேன்.
இந்த இரண்டு பண்புகளும் எக்காலத்திற்கும் ஏற்றமுடையதாய் இருப்பதனாலும், பூமியைப் போன்றே பாரதியும் பாகுபாடு பார்ப்பதில்லை என்று கூறி, அவரது வழியில் நடப்பதே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும் என்று கூறினேன்.
பின்னர் பின்வரும் என் கவிதையை பன்மொழிப் புலவர்களின் முன்னால் வாசித்தேன்.
“பாரில் பிறந்தோர் யாவருக்கும் பாங்காய் சொந்தமான பூமியாம்;
பூமியோ பார்ப்பதில்லை
பாகுபாடு, பாரதியோ தூற்றுகிறார் பாகுபாட்டை;
பாகுபாடற்ற சமுதாயத்திலே விளையுமாம் பிறர்நலம் வேண்டும் பண்பே;
பண்பை பின்பற்றி செல்கையிலே பிறர்துயர் தீர்த்தலும் பழகிடுமாம்;
பழகிய விதையின் பழங்களாக பண்பட்ட சந்ததியும் பிறந்திடுமாம்;
பிறப்பின் பெருமையை உணர்ந்தே பாரதிக்கு பெருமை சேர்ப்போமே;
சேர்ந்தே நாமும் பாரதிக்கு செழுமையாய் அஞ்சலி செலுத்துவோமே!!”.
இந்நிகழ்ச்சியில் மலையாளத்தின் புலவரே சிறப்பு விருந்தினராய் இருந்ததால் அவர் என் கவிதையை ரசித்து பாராட்டினார். அந்நிகழ்ச்சியில் பங்குகொண்ட பலரும் நம் மகாகவியின் புகழினை அறிந்திருந்ததை என் கவிதைக்கு அவர்கள் வழங்கிய பாராட்டிலிருந்து அறிய முடிந்தது. அன்று, அதுவே நம் பாரதிக்கு அளித்த அஞ்சலியாக என்னால் உணரப்பட்டது.
மொழிகளுக்கு அப்பாற்பட்டு மனங்களில் இன்றும் வாழும் மாமனிதன், மகாகவி அவன்!!