ஆதார் எண் இணைப்புக்கான காலக்கெடு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந் நிலையில் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை அனைத்து சேவைகளுடன் இணைப்பது அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. வங்கிக் கணக்கு, மொபைல் எண், அரசின் திட்டங்களைப் பெற என அனைத்து சேவைகளுக்கும் மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார் எண் அவற்றுடன் இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால், ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரினார். இதன் பின்னர் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் கூறுகையில், ”ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு ஏற்கெனவே நீட்டிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மீண்டும் நீட்டிக்க அரசு தயாராக உள்ளது. வழக்கின் விசாரணையைப் பொறுத்து இது குறித்து அரசு முடிவு செய்யும்” என்றார்.
எனவே ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.