
வினாத்தாள் வெளியான சர்ச்சையை அடுத்து 2 பாடங்களுக்கான தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்திற்கான தேர்வு மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதேபோல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணித தேர்வும் மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியானதாக வந்த புகாரையடுத்து சிபிஎஸ்இ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மறுதேர்வு நடத்தப்படும் தேதி ஒருவாரத்திற்குள் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒருசில பாடங்களுக்கான வினாத்தாள்கள் இணையதளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டு எழும்பியது. தலைநகர் டெல்லியில் வாட்ஸ்அப் மூலம் கேள்வித்தாள் பரவியதாகவும் கூறப்பட்டது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல 10ம் வகுப்பு கணித பாட வினாத்தாளும் வட மாநிலங்களில் வெளியானதாக கூறப்பட்டது. இது தொடர்பாக புகார் வந்துள்ளதாகவும், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியிருந்தார்.
ஆனால், சிபிஎஸ்இ கல்வி வாரியம் அதை மறுத்து வந்தது. தேர்வினை சீர்குலைக்க சில சமூக விரோதிகள் முயற்சி செய்கின்றனர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், 12ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10ம் வகுப்பு கணித தேர்வு மீண்டும் நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் நாள் ஒருவாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.



