ஆமதாபாத்:
குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஹர்திக் படேல், இன்று சௌராஷ்டிரா பகுதியில் குஜாராத் மாநில போலீசார் வசம் சிக்கினார்.
குஜராத் மாநிலத்தில் வாழும் படேல் சமூகத்தினர், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அண்மைக் காலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தப் போராட்டத்துக்கு ஹர்திக் படேல்(22) என்ற இளைஞர் தலைமை தாங்கி வருகிறார். கடந்த 25 ஆம் தேதி ஆமதாபாத்தில் இவர்களின் பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் குஜராத் மாநிலத்தில் பல நாட்களுக்கு பதற்றம் நிலவியது. இதே கோரிக்கையுடன் ஹர்திக் படேல் தலைமையில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று ஹர்திக் படேல் ஆமதாபாத்தில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள, அர்வாலி மாவட்டம் டெயின்பூர் என்ற இடத்தில் உரிய போலீஸ் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தினார். அங்கே கூடியிருந்த சுமார் 2 ஆயிரம் பேர் மத்தியில் நின்று பேசினார். அவர் பேசி முடித்து அங்கிருந்து புறப்பட்டபோது, அவரை மீண்டும் கைது செய்ய போலீசார் காத்திருந்தனர். ஆனால் அவர் எவர் கையிலும் அகப்படாமல், ரகசியமாக தனது வாகன அணி வகுப்பில் இடம்பெற்றிருந்த கார் ஒன்றில் ஏறி தப்பினார். அவருடன் அவரது இயக்கத்தின் முன்னணித் தலைவர்களும் தப்பினர்.
இந்நிலையில், ஹர்திக் பட்டேலை போலீசார் சட்டவிரோதமாகக் கைது செய்து, ரகசிய இடத்தில் அடைத்து வைத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதினர். இதையடுத்து, ‘பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி’ இயக்கத்தின் சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆள்கொணர்வு மனுவில், ஹர்திக் படேலை போலீசார் சட்ட விரோதமாகக் கைது செய்துள்ளனர். அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை, அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என குஜராத் உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் கோரப்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலை 1.20 இல் இருந்து 2.40வரை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கே.ஜே. தாக்கூர் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, ஹர்திக் படேல் எங்கே உள்ளார்? என உடனடியாக கண்டுபிடிக்கும்படி குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் உடனடியாக ஹர்திக் பட்டேலை கண்டுபிடிக்குமாறும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நாளை 24ம் தேதிக்குள் அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என்றும், மீண்டும் அன்றைய தினம் விசாரணை நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், குஜராத்தின் சௌராஷ்ட்டிரா பகுதியில் ஹர்திக் பட்டேல் தங்கியுள்ளதாக குஜராத் போலீசாருக்கு ஹர்திக் பட்டேலின் வக்கீல் மூலம் தகவல் கிடைத்தது. இதை அடுத்து அவரை அங்கிருந்து அழைத்துவந்து உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.


