புது தில்லி: வங்கிகளில் வராக்கடன் அதிகரித்ததற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியின் ஊழலே காரணம் என்று மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
வங்கிகளில் வராக் கடன்கள் அதிகரித்திருப்பதற்கு விளக்கம் கேட்டும், எப்படி வசூல் செய்வது என்று வழி கேட்டும் மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு கடிதம் எழுதியது நாடாளுமன்ற குழு. இதற்கு பதில் அளித்து நாடாளுமன்ற மக்களவைக் குழுவுக்கு ரகுராம் ராஜன் எழுதியுள்ள கடிதத்தில் சில பகீர் விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
வங்கிகளின் வராக்கடன் அதிகரிப்புக்கு தகுதி இல்லாத மற்றும் ஊழல் மலிந்த வங்கிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களும் தான் காரணம் என ரகுராம் ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கிகளின் வராக் கடன் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. வங்கிகளின் வராக் கடன் அதிகரிப்பு மற்றும் அதன் பாதிப்புகளுக்கான சூழல், 2006ஆம் ஆண்டு முதலே உருவாகி விட்டது. 2006-2008 ஆம் ஆண்டில் வராக் கடன் அளவு அதிகரித்துவிட்டது. கடன் பெற்றவர்களுக்கு கால அவகாசம் வழங்கி, கடன் வசூல் செய்வதில் வங்கிகள் சுணக்கம் காட்டின. அதுவும் இந்தச் சூழல் பெருக ஒரு காரணமாக அமைந்துவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார் ரகுராம் ராஜன்.
ரகுராம் ராஜனின் இந்தக் கருத்து, ஆளும் பாஜக.,வுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதாகக் கருதப் படுகிறது. இதை வைத்தே, காங்கிரஸின் ஊழல் கறை படிந்த கையை அவர்கள் மேலும் குத்திக் கிளறுவார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், மன்மோகன் சிங் பிரதமராக 2வது முறையாக பதவியேற்ற பிறகு, எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஊழல் புகார்களால், பல்வேறு விஷயங்களில் கடினமான முடிவுகள் எடுப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டியது. இதனால், கடன் வசூலும் பாதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார் ரகுராம் ராஜன்.
வராக்கடன்களால் எத்தகைய பின்விளைவுகள் ஏற்படும் என்று வங்கிகள் உணர்ந்திருந்தன என்றாலும், அரசியல் காரணங்களால் அவை ஒரு முடிவை எடுக்கத் தயங்கின. மேலும், ரிசர்வ் வங்கி எடுத்த சீர்திருத்த நடவடிக்கைக்களுக்கு அப்போதைய மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று தனது விளக்கக் கடிதத்தில் கூறியுள்ளார் ரகுராம் ராஜன்.
ஏற்கெனவே நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதில் இருந்து, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டதாக குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார். இப்போது ரகுராம்ராஜனின் விளக்கக் கடிதம் எரிகிற தீபத்துக்கு மேலும் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்திருக்கிறது.