சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தேவஸம் போர்டு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று குரல்கள் ஒலித்து வந்த நிலையில், அவ்வாறு தேவசம் போர்டு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தால், அதை அரசு தடுக்காது என்று கூறியுள்ளார் கேரள தேவசம் போர்டு அமைச்சர்.
தீர்ப்பை வரவேற்கிறோம், ஆனால் தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்வதையும் வரவேற்கிறோம் என்று கூறி மக்களின் மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைத்துள்ளனர் கேரள கம்யுனிச அரசியல்வாதிகள்!
இதனிடையே, நம்பிக்கை உள்ள பெண்கள் சபரிமலைக்கு வரமாட்டார்கள் என்பது என் நம்பிக்கை என்று கூறினார் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்!
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவோம் என்று கூறி வந்தவர்கள், திடீரென மறு சீராய்வு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளனர். சபரிமலை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கொண்டாடியது முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு!
அதே நேரம், இந்தத் தீர்ப்பை வரவேற்ற தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், ”தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்தால் அதை அரசு எதிர்க்காது. அது சுதந்திரமாக செயல்படும் அமைப்பு. அரசின் நிலைப்பாட்டை போர்டு மீது திணிக்கப் போவதில்லை” என்று கூறி தங்களின் இரட்டை அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
அதுபோல், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா தேவசம் போர்டுக்கு அறிவுரை கூறியுள்ளார்.