பத்தனம்திட்டா: சபரிமலையின் புனிதத்தையும் கண்ணியத்தையும் தனித்துவத்தையும் குலைக்கும் வகையில் பருவப் பெண்கள் உள்ளிட்ட எல்லா வயதுப் பெண்களும் கோயிலுக்கு வருவதாக இருந்தால், இனி ஆபரணப் பெட்டி கோயிலுக்கு வராது. தந்திரிகளும் கூண்டோடு பதவி விலகுவர் என்று பந்தளம் அரண்மனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளுக்கு பந்தளம் அரண்மனை மறுப்பு வெளியிட்டுள்ளது. இது பொய்யான தகவல் என்று அது குறிப்பிட்டுள்ளது.
பந்தளம் கொட்டாரம் நிர்வாஹக சங்கம், பந்தளம் அரண்மனை செயலர் பி.என். நாராயண வர்மா பெயரிட்டு அனுப்பப் பட்டுள்ள அறிக்கையில், பந்தளம் மன்னர் குடும்பத்தினர் அறிவிப்பு, என்று வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை என்றும், தாங்கள் அவ்விதம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இனி சபரிமலையிலுள்ள பதினெட்டாம் படி தாண்டி ஒரு பெண் சென்றாலும் பந்தள அரண்மனையிலுள்ள ஆபரணப் பெட்டி சபரிமலை சந்நிதானம் வராது. ஆலயம் வேண்டுமானால் அரசு சொத்தாக இருக்கலாம் ஐயப்பனுக்குரிய ஆபரணங்கள் எங்களது குடும்ப சொத்தாகும். அதை யாரும் கட்டாயப்படுத்த இயலாது… என்று பந்தளம் அரண்மனை கூறியதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.
மேலும், பெண்கள் நுழைந்த சபரிமலையில் இனி பந்தள மன்னரின் குடும்பத்தினரும் வரமாட்டார்கள் என இந்த அறிவிப்பின் மூலம் தீர்மானமாக அறிவிக்கிறோம் என அரசுக்கும் தேவஸ்தானத்திற்கும் பந்தளம் அரண்மனையில் இருந்து அறிக்கை அனுப்பியுள்ளார்கள் என்றும், தீர்ப்பை கட்டாயமாக்கினால் சபரிமலை தந்திரிகளும் கூட்டாக பதவி விலகுவதோடு இனி சபரிமலைக்கு செல்வதில்லை என தீர்மானித்துள்ளார்கள் என்றும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இவற்றை பந்தளம் அரண்மனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.





